மும்பை : இந்தியா - இங்கிலாந்து தொடர் தொடங்கிய நாள் முதல் இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் மாஸ்டர் பேட்ஸ்மேன் கவாஸ்கர் பல தவறுகளை சுட்டிக் காட்டினார்.
தற்போது இந்தியா டெஸ்ட் தொடரை இழந்துள்ள நிலையில், தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார் கவாஸ்கர். கோலியின் தலைமை, பயிற்சியாளர்களின் முறைகள், பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற தன்மை இது குறித்தே அதிகம் விமர்சித்து வருகிறார்.

தற்போது மொயீன் அலி நான்காம் போட்டியில் அதிக விக்கெட்கள் எடுத்த நிலையில், அவரது பந்துவீச்சை சமாளிக்க இந்திய அணி என்ன முறைகளை கையாண்டது? ஏன் அவர்கள் வீழ்ந்தார்கள் என்பது குறித்து விமர்சித்து இருக்கிறார்.
மொயீன் அலி இங்கிலாந்து அணியில் முதல் மூன்று போட்டிகளில் இடம் பெறவில்லை. அவர் இரண்டாம் சுழல் பந்துவீச்சாளர் என்ற அளவிலேயே உத்தேச அணியில் இணைக்கப்பட்டார். நான்காம் போட்டியில் இரண்டு சுழல் பந்துவீச்சாளர்கள் தேவை என்ற சூழ்நிலையில், அவரை பதினோரு பேர் கொண்ட அணியில் சேர்த்தனர்.
இரண்டாம் சுழல் பந்துவீச்சாளராக வந்த மொயீன் அலி, இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக மாறினார். முதல் இன்னிங்க்ஸில் 5 விக்கெட்கள் மற்றும் இரண்டாம் இன்னிங்க்ஸில் 4 விக்கெட்கள் எடுத்தார். இந்திய பேட்ஸ்மேன்கள் அவரது பந்தை சமாளிக்க முடியாமல் திணறினர். ஆடுகளத்தில் இருந்த சொரசொரப்பான பகுதியை பயன்படுத்திய மொயீன் அலி, விக்கெட்களை அள்ளினார்.
கவாஸ்கர் இது பற்றி எழுதியுள்ள குறிப்பில், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் பேட்டிங் நுணுக்கங்களை கொன்று வருகிறது. வெள்ளைப் பந்தில் "நிற்பது, பந்தை அடிப்பது" என்ற முறையில் ஆடி வரும் வீரர்கள், டெஸ்டில் நகரும் பந்துகளை, சுழலும் பந்துகளை எதிர்கொள்ள திணறி வருகிறார்கள் என கூறியுள்ளார்.
இந்திய வீரர்கள் சுழல் பந்தை எதிர்கொள்வதில் வல்லவர்கள் என்ற நிலையில் மொயீன் அலி பந்தை அவர்களால் எதிர்கொள்ள முடியவில்லை என்பதை ஜீரணிக்க முடியவில்லை என கூறியுள்ளார் கவாஸ்கர். கோலியின் பேட்டிங்கை மட்டும் பாராட்டியுள்ளார்.