கிங்ஸ்டன்: லலித் மோடி- பிசிசிஐ சண்டையில் ஐபிஎல் நிர்வாகக் குழு உறுப்பினராக செயல்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கருக்கு வரவேண்டிய சம்பளத் தொகை நிலுவையில் உள்ளது.
2008-2010-ம் ஆண்டு வரை ஐபிஎல் நி்ர்வாகக் குழு உறுப்பினாராக இருந்தார் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர். நிர்வாகக் குழுவில் பணிபுரிவதற்காக முதலில் ரூ. 1 கோடியும் பின்னர் ஆண்டுக்கு ரூ. 4 கோடியும் தருவதாக அப்போதைய பிசிசிஐ தலைவர் சரத் பவார் உறுதியளித்தார். தற்போது தலைமை மாறவே வாக்குறுதி காற்றில் விடப்பட்டுள்ளது.
இது குறித்து பிசிசிஐ அப்போதைய ஐபிஎல் தலைவர் லலித் மோடியைக் குறை கூறியது. அதற்கு மோடி, கவாஸ்கருக்கு ஏற்கனவே அளிக்கப்பட்ட வாக்குறுதியை தற்போதைய பிசிசிஐ தலைவர் ஷஷாங்க் மனோகர் காப்பாற்றவில்லை என்று குற்றம்சாட்டினார்.
ஐபிஎல் அமைப்பு மாற்றும் முன் கவாஸ்கருக்கு உறுதியளித்தவாறு பணம் கொடு்ககப்படும் என்று கூறப்பட்டு அதற்குத் தேவையான ஆவணங்கள் தயார் செய்யப்பட்டது. அந்த ஆவணங்கள் பிசிசிஐ தலைவரின் மேஜையில் வருடக்கணக்காக கிடக்கிறது என்றார் மோடி.
இது குறித்து மோடி மேலும் கூறியதாவது,
இந்த சம்பள விவகாரம் தொடர்பான ஆவண பணிகள் விரைவில் முடிக்கப்படும் என்று நான் கவாஸ்கரிடம் கூறினேன். இது தொடர்பாக என்னுடனும், பிசிசிஐ-ன் புதிய தலைவர் ஷஷங்குடனும் பேச்சுவார்த்தை நடத்துவதாக பவார் தெரிவித்தார். ஆனால் பல காரணங்களால் அது நடக்கவில்லை.
முந்தைய பிசிசிஐ தலைவர் வாக்குறுதி அளித்துள்ளதால் இந்த விவகாரம் அனைவரும் மகிழும் வண்ணம் முடியும். எனக்கு பவார் மற்றும் பிசிசிஐ மீது நம்பிக்கை உள்ளது என்றார்.