
இந்தியா தோல்வி
முதல் இன்னிங்சில் இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக ரோஹித் ஷர்மா 105 பந்துகளை சந்தித்து 19 ரன்களையும், ரஹானே 54 பந்துகளை சந்தித்து 18 ரன்களையும் எடுத்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கில் வெளியேறினார்கள். லோகேஷ் ராகுல் 0, புஜாரா 1, கேப்டன் கோலி 7, பண்ட் 2, ஜடேஜா 4 என்று வெளியேறினார்கள். இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன், க்ரெய்க் ஓவர்டன் தலா 3 விக்கெட்டுகளையும், ஓலே ராபின்சன், சாம் கர்ரன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பிறகு, களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 432 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து தொடக்க வீரர் ரோரி பர்ன்ஸ் 61 ரன்களும், ஹஸீப் ஹமீத் 68 ரன்களும், டேவிட் மலன் 70 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் ஜோ ரூட் வழக்கம் போல, இந்திய பவுலர்களை சிறப்பாக எதிர்கொண்டு 121 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். எனினும், இந்திய அணி 2வது இன்னிங்ஸில் மூன்றாவது நாளில் சிறப்பாக விளையாடிது. லோகேஷ் ராகுல் 8 ரன்களில் வெளியேறினாலும், மற்றொரு தொடக்க வீரர் ரோஹித் ஷர்மா 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, தொடர்ந்து சொதப்பி வந்த புஜாரா, மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 180 பந்துகளில் 91 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். அதேபோல், கேப்டன் விராட் கோலி 94 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். ஆனால், 4வது நாள் ஆட்டத்தில், புஜாரா மேற்கொண்டு ரன் ஏதும் எடுக்காமல், ஓலே ராபின்சன் ஓவரில் எல்பிடபிள்யூ ஆகி 91 ரன்களில் வெளியேறினார். இதன் பிறகு, இந்த டெஸ்ட் தொடரில் முதல் அரைசதம் அடித்த விராட் கோலி, ஓலே ஆண்டர்சன் ஓவரில் 55 ரன்களில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பிறகு ரஹானே 10 ரன்களில் ஆண்டர்சன் ஓவரில் கேட்ச் ஆக, ரிஷப் பண்ட் வெறும் 1 ரன்னில் ராபின்சன் ஓவரில் கேட்ச் கொடுத்து வெளியேற, மொயீன் அலி ஓவரில் முகமது ஷமி 6 ரன்களில் அவுட்டானார். இறுதியில், இந்திய அணி 278 ரன்களில் ஆல் அவுட்டாக, இங்கிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்று சமநிலை ஆனது.

தடுமாறிய கோலி
விராட் கோலி அரைசதம் அடித்தாலும், நான்காம் நாள் ஆட்டத்தில், போட்டி தொடங்கியதில் இருந்தே, ஒருவித பயத்துடனும், பதட்டத்துடனுமே விளையாடினார். அவரை பார்ப்பதற்கு எந்நேரமும் அவுட் ஆகும் மனநிலையில் இருப்பது போன்றே இருந்தது. அப்போது தான் 86.3வது ஓவரில் விராட் கோலி 46 ரன்கள் எடுத்திருந்த போது, ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓவரில் அவுட் கொடுக்கப்பட்டது. ஆண்டர்சனின் வீசிய பந்து கோலி பேட்டை உரசிச் சென்றது போல தெரிந்ததால் அம்பயர் அவுட் கொடுத்தார். உடனே கோலியும் 2 நடக்க ஆரம்பித்துவிட்டார். பிறகு, என்ன நினைத்தாரோ தெரியவில்லை.. திரும்பி ரஹானேவிடம் கேட்ச் கொடுத்தது குறித்து கேட்டார். அதற்கு ரஹானே, கேப்டன் கோலியை ரிவ்யூ எடுக்க அறிவுறுத்தினார். இதையடுத்து, கடைசி நேரத்தில் விராட் கோலி ரிவ்யூ எடுக்க, பந்து பேட்டில் படவில்லை என்பது உறுதியானது. ரிவ்யூவில், கோலியின் பேட் அவரது பேடில் உரசியதால் அந்த சப்தம் கேட்டது தெரிய வந்தது. ரஹானேவின் ஆலோசனை கோலியின் விக்கெட்டை தக்க நேரத்தில் காப்பாற்றியது. ஆனால், என்ன பயன்? கோலி அடுத்த சில பந்துகளிலேயே ஓலே ஆண்டர்சன் ஓவரில் 55 ரன்களில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். விராட் கோலி தனது தரத்துக்கு நிகராக விளையாடவில்லை என்பதே உண்மை.

இதுதான் பிரச்சனை
இந்நிலையில், இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் விராட் கோலி பேட்டிங் குறித்து பேசுகையில், " அவரது பேட்டுக்கும் உடம்புக்கும் எவ்வளவு இடைவெளி இருக்கிறது என்று பாருங்கள். அதுதான் அவரது பிரச்சனையே. அதனை அவர் நிச்சயம் மாற்ற வேண்டும். கிரீஸுக்கு வெளியே நிற்பது பற்றி நான் கவலைப்படுவதில்லை.பேட்டுக்கும், உடலுக்குமான தொலைவை குறைத்து விளையாடினால் உங்களால் எளிதாக பந்துகளை எதிர்கொள்ளவும் முடியும், தவிர்க்கவும் முடியும். ஷாட் தேர்வில் தான் கோலி கோட்டைவிடுகிறார் என்று நினைக்கிறேன். நீங்கள் ஷாட்ஸ் தேர்வை எளிமையாக வைத்திருக்க வேண்டும். அவர் 8000 ரன்கள் எடுத்துள்ளார், அநேகமாக கடைசி 6,500 ரன்கள் அவர் கிரீஸுக்கு வெளியே நின்று அடித்த ரன்களாகத்தான் இருக்கும். அதனால் அவர் பல மாற்றங்களை செய்ய வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. ஷாட்ஸ் தேர்வில் பிரச்சனை என்று நான் நினைக்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

அதை விளையாடக் கூடாது
மேலும் புஜாரா குறித்து பேசிய கவாஸ்கர், "இந்த நேரத்தில், நாம் இன்டென்ட் பற்றி பேசுகிறோம். குறிப்பாக, புஜாராவின் 'இன்டென்ட்' குறித்த கேள்வி உள்ளது. இங்கே ரன்களைப் பெறுவதே நோக்கமாகத் (இன்டென்ட்) தெரிகிறது. எனவே என்னைப் பொறுத்தவரை புஜாராவும் ஷாட் தேர்வில் தான் தடுமாறுகிறார். ஹெட்டிங்லே டெஸ்ட் போட்டியில், இரண்டாவது இன்னிங்ஸில் புஜாரா அவுட்டான அந்த பந்தை அவர் நிச்சயம் சந்தித்து இருக்க வேண்டியதில்லை. அவர் அதனை தவிர்த்திருக்கலாம். அதனால் அவருக்கு எந்த சிக்கலும் ஏற்படப் போவதில்லை. உங்களுக்கு பேட்டிங் செய்ய இன்னும் ஒரு நாள் முழுவதும் இருக்கிறது, நீங்கள் இங்கிலாந்து அணியை விட 140 ரன்கள் பின்தங்கியிருந்தீர்கள். 4 வது ஸ்டம்புக்கு போகும் பந்தை தொடுவதால் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் 5 வது, 6 வது ஸ்டெம்புக்கு செல்லும் பந்துகளை மீட் பண்ணுவது தான் சிக்கலாகிறது. இதுபோன்ற பந்துகளை அவர்கள் விளையாடக்கூடாது" என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

என்னென்ன மாற்றங்கள்?
அடுத்த போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் வரும் செப்டம்பர் 2ம் தேதி தொடங்குகிறது. இதில் இந்திய அணியில் நிச்சயம் சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திறமையான வீரராக இருந்தாலும், ரவீந்திர ஜடேஜாவால் அணிக்கு இதுவரை எந்த வகையில் பயன் கிடைக்கவில்லை. பேட்டிங்கில் நன்றாக தான் விளையாடுகிறார். ஆனால், பவுலிங்கில் தான் எந்த இம்பேக்ட்டும் இல்லை. ஸோ, அடுத்த போட்டியில் ரவீந்திர ஜடேஜாவுக்கு நிச்சயம் மாற்று களமிறக்கப்படலாம் என்று தெரிகிறது. அதேபோல், பவுலிங்கில் இஷாந்த் ஷர்மா நீக்கப்படலாம் என்றும் தெரிகிறது. இதில், இன்னொரு சுவாரஸ்யம் என்னவெனில், ரிஷப் பண்ட்டை நீக்கி ரிதிமான் சாஹாவுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.


Click it and Unblock the Notifications