இதற்கு முன் கேப்டன் ரோஹித்
ஆசிய கோப்பைக்கு முன்பு ரோஹித் சர்மா 3 ஒருநாள் போட்டிகள், 9 டி20 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு இருந்தார். அதில் ஒரு ஒருநாள் போட்டி மற்றும் ஒரு டி20 போட்டியில் மட்டுமே தோல்வி அடைந்தது இந்திய அணி.
ஆசிய கோப்பை வெற்றிகள்
அதே போல இந்த ஆசிய கோப்பையில் மூன்று தொடர் வெற்றிகளை பெற்று அசத்தியுள்ளார். இதில் முதல் போட்டியில் ஹாங்காங் அணிக்கு எதிராக தட்டுத்தடுமாறி 26 ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றி சிறிது அதிர்ச்சி அளித்தது. எனினும், அடுத்த இரண்டு போட்டிகளில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளை ஆதிக்கம் செலுத்தி பெற்ற வெற்றிகளால் தன் தலைமையை நிரூபித்துள்ளார். ஒரு தடுமாற்றத்தில் இருந்து அணியை விரைவில் மீட்டெடுக்க முடியும் என்பதையும் காட்டியுள்ளார்.
எப்படி செயல்படுகிறார் கேப்டன் ரோஹித்?
ரோஹித் சர்மா போட்டிக்கு முன்னே செய்யும் திட்டங்களை விட, போட்டி நடந்து வரும் போது துரிதமாக முடிவெடுப்பதில் அனைவரையும் ஈர்த்து வருகிறார். வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் கூட ஜடேஜா நீண்ட காலம் கழித்து அணிக்கு திரும்பிய நிலையில், தன் முதல் சில பந்துகளில் பவுண்டரிகளாக கொடுத்து கொஞ்சம் குழப்பத்தில் இருந்தார். அப்போது கேப்டன் ரோஹித், அனுபவ தோனி இணைந்து அவருடன் பேசி அவருக்கு தேவையான பீல்டிங் அமைப்பை உருவாக்கி கொடுத்தனர். அதே ஓவரில் விக்கெட் வீழ்த்தி அசத்தினார் ஜடேஜா. அதே போல, பேட்ஸ்மேன்கள் வரிசையை மாற்றவும் யோசிப்பதில்லை. வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில், தோனியை நான்காம் இடத்தில் ஆட வைத்தார் ரோஹித். இது தோனியின் முடிவல்ல. ரோஹித் தான் தோனி வேண்டும் என சைகை செய்து அவரை நான்காவது இடத்திற்கு பேட்டிங் செய்ய வர வேண்டும் என அழைத்தார். தோனியிடம் யோசனை கேட்டு தான் பல முடிவுகளை எடுக்கிறார் ரோஹித். அதை மிக வெளிப்படையாகவே செய்து வருகிறார். இதுவும் பாராட்டுதலுக்கு உரிய செயலே. இந்த விஷயத்தில் கோலி கொஞ்சம் மறைமுகமாக நடந்து கொள்கிறார் என்றே தோன்றுகிறது.
கோலிக்கு கேப்டன் பதவி நிலைக்குமா?
ரோஹித் சிறப்பாக செயல்பட்டு பெயர் வாங்கி வரும் நிலையில், விராட் கோலி விமர்சனங்களை சந்தித்து வருகிறார். இங்கிலாந்தில் இந்திய அணியின் சொதப்பல்களுக்கு கோலி, ரவி சாஸ்திரி கூட்டணியின் தவறான அணுகுமுறை தான் காரணம் என பல தரப்பில் இருந்தும் கூறப்படுகிறது. இனி ரோஹித்தை கேப்டனாக இந்திய அணிக்கு நியமிக்கலாமே என்ற பேச்சுக்கள் வர வாய்ப்புள்ளது. எனினும், ரோஹித் டெஸ்ட் அணிகளில் தேர்வு செய்யப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.