அதிர்ச்சி அளித்த இந்தியா
இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் எளிதாக வென்று தொடரை கைப்பற்றும் என தொடருக்கு முன் அனைவரும் கருத்து தெரிவித்தனர். ஆனால், முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி இரண்டாம் போட்டியில் தோல்வி அடைந்து அதிர்ச்சி அளித்தது.
கோலியின் தவறான முடிவு
இதற்கு முக்கிய காரணம், நான்கு வேகப் பந்துவீச்சாளர்கள் மட்டுமே போதும் என கோலி முடிவெடுத்தது தான். மேலும், ஜடேஜாவை விடுத்து ஹனுமா விஹாரியை அணியில் தேர்வு செய்ததும் தவறான முடிவாக அமைந்தது.
அணித் தேர்வு குழப்பம்
இது பற்றி கருத்து கூறிய கவாஸ்கர், "அணித் தேர்வு குழப்பங்களை நாம் பார்த்துக் கொண்டே இருக்கிறோம். தென்னாபிரிக்க தொடரில் இருந்து பல போட்டிகளை நாம் இதனால் இழந்துள்ளோம். சரியான அணியை தெரு செய்து இருந்தால் பல போட்டிகளை நாம் வென்று இருக்க முடியும்" என்றார்.
கேப்டன், கோச்சை கேள்வி கேட்க வேண்டும்
"அடுத்த இரண்டு போட்டிகளில் அணியில் உள்ள ஓட்டைகளை பார்த்து அடைக்க வேண்டும். ஸ்மித், வார்னர் இல்லாத இந்த அணியிடம் இந்தியா தோல்வி அடைந்தால் கேப்டன், பயிற்சியாளர் மற்றும் உதவியாளர்களின் பங்கை பற்றி நாம் கேள்வி கேட்க வேண்டும்" என காட்டமாக கூறினார்.
ஆஸ்திரேலியா சரியான அணித்தேர்வு
ஆஸ்திரேலிய அணி 3 வேகப்பந்துவீச்சாளர்கள், ஒரு சுழற்பந்துவீச்சாளர் மட்டுமே கொண்டு வெற்றி பெற்றது. அதிலும் சுழற்பந்துவீச்சாளர் நாதன் லியோன் 8 விக்கெட்கள் வீழ்த்தி அணியின் வெற்றியில் பெரிய பங்கு வகித்தார். ஆனால், இந்திய அணியில் பகுதி நேர பந்துவீச்சாளர் ஹனுமா விஹாரியால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. அடுத்த இரண்டு போட்டிகளிலாவது இந்தியா வெற்றி பெற வேண்டும்.