வீரர்கள் முடக்கம்
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சர்வதேச அளவில் அனைத்து போட்டிகளும் குறிப்பாக கிரிக்கெட் போட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அனைத்து போட்டித் தொடர்களும் ரத்து அல்லது ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இரண்டு மாதங்களாக எந்தவிதமான போட்டிகளையும் விளையாடாமல் மைதானங்களில் பயிற்சிகளை மேற்கொள்ளாமல் விளையாட்டு வீரர்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.
காலவரையின்றி ஒத்திவைப்பு
இதனிடையே இந்தியாவின் விளையாட்டு அடையாளமான ஐபிஎல் தொடரும் இந்த ஆண்டு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன. கடந்த மார்ச் 29ம் தேதி துவங்க திட்டமிடப்பட்டிருந்த இந்த தொடர், தற்போது அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கென தீவிர திட்டமிடல்கள், ஆலோசனைகளில் பிசிசிஐ ஈடுபட்டுள்ளது.
கேகேஆர் சிஇஓ பளீச்
இதனிடையே, கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக வீடுகளில் முடங்கியுள்ள கிரிக்கெட் வீரர்களை மீண்டும் போட்டிகளுக்காக தயார் படுத்துவதே தற்போதைய முக்கியமான சவால் என்று ஐபிஎல் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சிஇஓ வெங்கி மைசூர் தெரிவித்துள்ளார். வீரர்களை இதிலிருந்து மீட்க தங்களது அணி நிர்வாகிகள் தயாராக உள்ளதாகவும் இதற்கென பல கட்டங்களில் ஆலோசனைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
வீரரிகளிடம் கலந்துரையாடல்கள்
இதற்கென வீரர்களிடம் வீடியோ கால் மூலம் நேரடியாக கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் அவர்களிடம் எத்தகைய வசதிகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் உற்சாகம் குறைவின்றி இருப்பதை உணர முடிந்ததாகவும் அவர்களிடம் அதிகமான நம்பிக்கை காணப்பட்டதாகவும் வெங்கி மைசூர் கூறியுள்ளார்.