வெல்லிங்டனில் துவக்கம்
இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வெல்லிங்டனின் பேசின் ரிசர்வ் மைதானத்தில் இன்று துவங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், முதலில் பேட் செய்த இந்தியா, மைதானத்தில் வீசிய பலமான காற்றால், விளையாட மிகவும் சிரமப்பட்டது.
இந்திய வீரர்கள் திணறல்
வெல்லிங்டன் மைதானத்தில் போட்டி துவங்கியது முதலே பலத்த காற்று வீசியதால், முதலில் பேட் செய்த இந்திய வீரர்கள் மிகவும் திணறலுடன் ஆட்டத்தை எதிர்கொண்டனர். இந்திய வீரர்கள், விராட் கோலி, புஜாரா உள்ளிட்டவர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்நிலையில் இந்தியா 5 விக்கெட்டுகளை இழந்து 122 ரன்களை எடுத்திருந்தபோது, மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
கைல் ஜாமீசன் மகிழ்ச்சி
விராட் கோலி, சத்தீஸ்வர் புஜாரா, அனுமன் விஹாரி ஆகிய 3 விக்கெட்டுகளை இந்த போட்டியில் நியூசிலாந்து வீரர் கைல் ஜாமீசன் வீழ்த்தியுள்ளார். வெறும் 38 ரன்களை மட்டுமே கொடுத்து அவர் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதையடுத்து விராட் கோலியை முதல் நாளிலேயே வீழ்த்துவது மிகவும் பெரிய விஷயம் என்று அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
விராட் விக்கெட் குறித்து ஜாமீசன்
விராட் கோலியை வெறுமனே 2 ரன்களில் ஆட்டமிழக்க செய்ததை தன்னால் நம்ப முடியவில்லை என்று தெரிவித்துள்ள கைல் ஜாமீசன், கடந்த சில வாரங்களில் நடைபெற்றது எல்லாமே கனவு போல உள்ளதாக தெரிவித்துள்ளார். போட்டியின் முதல் நாள் முடிவில் நியூசிலாந்து வலிமையாக உள்ளதாக அவர் கூறினார்.
பிட்ச் உதவியால் சாத்தியம்
விராட் கோலி, புஜாரா போன்ற இந்திய அணியின் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியது மிகப்பெரிய விஷயம் என்று தெரிவித்துள்ள கைல் ஜாமீசன், மைதானத்தின் பிட்ச் உதவியாலேயே இது சாத்தியமானது என்றும் கூறியுள்ளார். விராட்டை வீழ்த்தும்போது தான் சிறிது தடுமாறியதாகவும், ஆனால் உடனடியாக சமாளித்து விக்கெட்டை எடுத்ததாகவும் அவர் மேலும் கூறினார்.
சக வீரர்களுக்கு நன்றி
ஜாமீசன் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்த அவருக்கு அவரது உயரமும் சிறப்பான வகையில் உதவி வருகிறது. இதன்மூலம் அதிகமான பவுன்ஸ் பந்துகளை அவர் போட்டு, புஜாரா மற்றும் விஹாரியின் விக்கெட் இழப்பிற்கு காரணமாக உள்ளார். மேலும் தன்னுடைய பந்துவீச்சிற்கு சக நியூசிலாந்து வீரர்களும் உறுதுணையாக இருந்ததாக தெரிவித்த ஜாமீசன் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
காற்றை பயன்படுத்திய ஜாமீசன்
இதனிடையே மைதானத்தில் அதிக காற்று வீசிய நிலையிலும் தன்னை பந்துவீச அனுமதித்த கேப்டன் கேன் வில்லியம்சுக்கும் ஜாமீசன் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார். அதிர்ஷ்டவசமாக மைதானத்தில் வீசிய பலத்த காற்றும் தன்னுடைய பந்துவீச்சுக்கு பெரிதும் கைகொடுத்ததாகவும் ஜாமீசன் தெரிவித்துள்ளார்.