டெல்லி : தற்போது இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக ஆடிவரும் தினேஷ் கார்த்திக் ரன் எடுக்க தடுமாறி வருவதால், இளம் வீரரான ரிஷப் பந்த்துக்கு வாய்ப்பு அளிக்க உள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இதை பலரும் வரவேற்றுள்ள நிலையில், கவுதம் கம்பீர் தினேஷ் கார்த்திக்குக்கு மற்றொரு முறை வாய்ப்பளிக்க வேண்டும் என கூறி இருக்கிறார்.
இது பற்றி டைம்ஸ் ஆப் இந்தியாவில் பேசிய கம்பீர், “கார்த்திக் தன் கிரிக்கெட் வாழ்வில் தற்போது வாழ்வா, சாவா என்ற நிலையில் இருக்கிறார். எனவே, அவருக்கு ஒரு போட்டி குறைவாக கொடுப்பதை விட அதிகமாக கொடுக்கவேண்டும். அடுத்த போட்டியிலோ, அதற்கடுத்த டெஸ்ட் போட்டியிலோ அவருக்கு வாய்ப்பளிக்கவில்லை என்றால் எதன் பின் நாம் அவரை பார்க்கவே முடியாது. ரிஷப் காத்திருக்கலாம். அவருக்கு இன்னும் பல ஆண்டுகள் உள்ளது” என தன் கருத்தை வெளிப்படுத்தினார்.
