டெல்லி: நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் ஆதிக்கம் செலுத்தி வெற்றிபெற்று மகிழ்ச்சி அளிப்பதாக ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை தொடரில் நெதர்லாந்து அணி 309 ரன்கள் வித்தியாசத்தி வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 399 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 44 பந்துகளில் 106 ரன்களும், டேவிட் வார்னர் 93 பந்துகளில் 104 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 71 ரன்களும், லபுஷேன் 62 ரன்களும் விளாசினர். நெதர்லாந்து அணி தரப்பில் வான் பீக் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனை தொடர்ந்து களமிறங்கிய நெதர்லாந்து அணி 21 ஓவர்களில் 90 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஆடம் ஜாம்பா 3 ஓவர்கள் வீசி 8 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதேபோல் மிட்செல் மார்ஷ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் ஆஸ்திரேலியா வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை உலகக்கோப்பை தொடரில் பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் புள்ளிப்பட்டியலிலும் 6 புள்ளிகளுடன் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இந்த வெற்றி குறித்து ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் பேசுகையில், மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். நிச்சயம் நிறைவான ஆட்டமாக அமைந்தது. 400 ரன்கள் இலக்கி நிர்ணயித்து சிறப்பாக டிஃபெண்ட் செய்திருக்கிறோம். மேக்ஸ்வெல் ஆடிய நிச்சயம் வேற லெவன் ஆட்டம் தான். அந்த பார்ட்னர்ஷிப்பில் இருவரும் சம அளவில் ரன்கள் சேர்த்தோம் என்றே நினைக்கிறேன் என்று கிண்டல் செய்தார். தொடர்ந்து, மிகச்சிறந்த ஆட்டத்தை மேக்ஸ்வெல் ஆடினார். நான் பார்த்த இன்னிங்ஸ்களிலேயே சிறந்த ஒன்று.
நாங்கள் எந்த ஸ்டைலில் விளையாட வேண்டும் என்று விரும்பினோமோ, அதேபோல் விளையாடினோம். அதேபோல் ஸ்டீவ் ஸ்மித்திடம் இருந்து ரன்கள் வரத் தொடங்கியது மகிழ்ச்சியாக உள்ளது. அதேபோல் பவுலிங்கில் பவர் பிளே விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்று முடிவு செய்தோம். நிறைய அதிர்ஷ்டத்துடன் சிறப்பாக பந்துவீசினோம் என்று நினைக்கிறேன். ஆடம் ஜாம்பா மீண்டும் அசத்தலாக வீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அடுத்த போட்டியில் சிறந்த அணிகளில் ஒன்றான நியூசிலாந்து அணியை எதிர்த்து களமிறங்க உள்ளோம். தரம்சாலா மைதானத்தில் மிக முக்கியமான போட்டியில் விளையாடவுள்ளோம். உலகக்கோப்பை தொடரில் நல்ல நிலையில் இருக்கிறோம் என்று நினைக்கிறேன். அதேபோல் பேட்டிங்கில் இன்னும் முழுமையான ஆதிக்கத்தை வெளிப்படுத்தவில்லை. அதில் முன்னேற்றம் தேவை என்றே நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.