மும்பை: இந்திய அணியின் பலம் வாய்ந்த பவுலிங் அட்டாக்கை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் கிளென் மேக்ஸ்வெல் கருத்து தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பும்ரா, சிராஜ் மற்றும் முகமது ஷமி மூவரின் பந்துவீச்சும் உச்சத்தில் இருக்கிறது. இதுவரை பும்ரா வீசியுள்ள 383 பந்துகளில் 268 பந்துகளை டாட் பாலாக வீசியுள்ளார். அதுமட்டுமல்லாமல் பும்ரா 16 விக்கெட்டுகள், முகமது ஷமி 16 விக்கெட்டுகள், முகமது சிராஜ் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். ஆடுகளம், சூழல் எல்லாவற்றையும் கடந்து அனைத்து நேரங்களிலும் மூவரும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்த உலகக்கோப்பை தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் இறுதிப்போட்டி நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்திய அணியின் வலிமையான பவுலிங் அட்டாக்கை ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் எப்படி எதிர்கொள்வார்கள் என்ற விவாதம் இப்போதே எழுந்துள்ளது. இதுகுறித்து ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இரட்டை சதம் விளாசிய கிளென் மேக்ஸ்வெல் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆஸ்திரேலிய அணியின் கிளென் மேக்ஸ்வெல் பேசுகையில், முகமது ஷமி பந்தின் சீம் பகுதியை பிடித்து வீசி வருவதால், இரு பக்கங்களிலும் ஸ்விங் செய்ய முடிகிறது. சர்வதேச கிரிக்கெட்டில் முகமது ஷமி சீம் பகுதியை பிடித்து பந்துவீசுவதை போல், வேறு எந்த பவுலரும் நேராக பிடித்து வீச முடியவில்லை. அதிலும் புதிய பந்தில் ஷமி கூடுதல் ஆக்ரோஷமாக செயல்பட்டு வருகிறார். பும்ரா மற்றும் ஷமி இருவரும் விக்கெட் டேக்கர் என்பதால், ஷமி பந்துவீச்சில் தான் ரன்கள் அடிக்க முயற்சிப்பார்கள்.
ஆனால் ஷமி பந்துவீச்சில் கொஞ்சம் தாமதமாக அவுட் ஸ்விங் செய்யும் போது, அவரிடம் ரன்கள் விளாசுவது கடினமான ஒன்றாகும். இந்திய அணியின் பந்துவீச்சில் ஒன்றை மட்டும் கணித்துள்ளோம். தொடக்கத்தில் பந்து நன்றாக ஸ்விங் ஆகினாலும், கொஞ்சம் அட்டாக் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். இந்திய அணிக்கு எதிரான போட்டிகளில் பல்வேறு அணிகளும் பவர் பிளே ஓவர்களில் கொஞ்சம் டிஃபென்சிவ் ஆட்டத்தை தான் விளையாடி இருக்கிறார்கள் என்பதை கண்டறிந்துள்ளோம். அதனால் எங்களின் ஆட்டத்தில் சிறிதளவு மாற்றம் இருக்கும் என்று கூறியுள்ளார்.