மொஹாலி: இந்தியாவில் நடைபெற்ற நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிக்கு எதிரான தொடருக்காக தேர்வு செய்யப்பட்டவர் ஜித்தேஷ் சர்மா. விக்கெட் கீப்பர் மற்றும் அதிரடி பேட்ஸ்மேன் என்று ஃபினிஷர் ரோலில் சிறப்பாக விளையாடக் கூடியவர்.
இருப்பினும் இந்திய அணிக்காக அறிமுகமாகவில்லை. ஆனால் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக ஃபினிஷர் ரோலில் ஆடிய ருத்ரதாண்டவம் ஜித்தேஷ் சர்மாவுக்கு இந்திய அணியில் மீண்டும் வாய்ப்பை பெற்று கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் ஜித்தேஷ் சர்மா தேர்வு செய்யப்படவில்லை. ஏனென்றால் 160 ஸ்ட்ரைக் ரேட்டில் 309 ரன்களை ஐபிஎல் தொடரில் குவித்து அசத்தியவர் ஜித்தேஷ் சர்மா.

இந்த நிலையில் ஜித்தேஷ் சர்மா பேசுகையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடருக்கு தேர்வாகாததால் எந்த வருத்தமும் இல்லை. ஒரு வேளை கடவுள் எனக்காக மிகப்பெரிய திட்டத்தை வைத்திருக்கலாம் என்று நினைக்கிறேன். இந்திய அணியின் ஓய்வறையில் நேரம் செலவிட்டது மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது. ராகுல் டிராவிட் போன்ற ஜாம்பவான் வீரர்களுடன் ஆலோசனை செய்ய முடிந்தது.
ஒருமுறை ராகுல் டிராவிட்டிடம் சென்று, நான் அதிக ரன்களை குவிக்க விரும்புகிறேன் என்று கூறினேன். அதற்கு அவர் சிரித்துக் கொண்டே, நீ விளையாடப் போகும் இடத்தில் ரன்கள் சேர்ப்பது முக்கியமல்ல. எந்த மாதிரியான இம்பேக்ட் ஏற்படுத்தப் போகிறாய் என்பதே முக்கியம். வெற்றிக்கான பங்களிப்பு என்ன என்பதே ஒரு வீரருக்கு முக்கியம். ஒரு வேளை விரைந்து 4 முதல் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தால், அப்போது என்ன செய்கிறோம் என்பது முக்கியம்.
அந்த நேரத்தில் எதிரணிக்கு சவாலாக இலக்கை நிர்ணயிப்பதே முக்கியம் என்று தெரிவித்தார். தொடர்ந்து ஜெர்சி எண் பற்றிய கேள்விக்கு, நான் பெரியவனாக வளரும் போது என் தந்தை கங்குலியை பற்றி பேசிக் கொண்டே இருப்பார். சவுரவ் கங்குலியின் மிகத்தீவிர ரசிகர் என் தந்தை. அவரால் மட்டுமே எனது ஜெர்சி நம்பராக 99ஐ தேர்வு செய்தேன். அதேபோல் ஒரு விக்கெட் விக்கெட் கீப்பராக கில்கிறிஸ்ட் மற்றும் தோனி அதிகமாக பின்பற்றுவேன் என்று தெரிவித்துள்ளார்.