இதுதான் வளர்ச்சி.. 14 வயதிலேயே விராட் கோலியை விட பெரிய பிரபலமாக மாறிய வைபவ் சூர்யவன்ஷி!
துபாய்: துபாயில் நடைபெற்று வரும் அண்டர்-19 ஆசியக் கோப்பை தொடரில் 171 ரன்கள் விளாசி உலக சாதனை படைத்த இந்தியாவின் வைபவ் சூர்யவன்ஷி தற்போது இணையத்தில் விராட் கோலியையே பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்துள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள பதில் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.
2025 அண்டர் 19 ஆசிய கோப்பை தொடரில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான போட்டியில் 95 பந்துகளில் 171 ரன்கள் குவித்து, அண்டர்-19 ஆசியக் கோப்பையில் அதிக ரன் அடித்த இந்தியர் என்ற சாதனையை வைபவ் படைத்தார்.

கூகுளில் நம்பர் 1 இந்தியர்
வைபவ் சூர்யவன்ஷியின் இந்த அதிவேக ஆட்டம் மற்றும் இளம் வயதில் அவர் படைக்கும் சாதனைகளால், இணையத்தில் அவரைத் தேடுபவர்களின் எண்ணிக்கை ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. போட்டி முடிந்த பிறகு வர்ணனையாளர் அவரிடம் ஒரு ஆச்சரியமான தகவலைப் பகிர்ந்தார்.
"உங்களுக்குத் தெரியுமா என்று தெரியவில்லை.. 2025-ம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட இந்தியர்கள் பட்டியலில் நீங்கள் விராட் கோலியை விட முன்னிலையில் இருக்கிறீர்கள். உலக அளவில் அதிகம் தேடப்பட்ட நபர்களில் 6-வது இடத்தில் இருக்கிறீர்கள். இந்தப்புகழை எப்படிச் சமாளிக்கிறீர்கள்?" என்று கேட்டார்.
வைபவ் சொன்ன பக்குவான பதில்
அதற்கு அந்த 14 வயதுச் சிறுவன் மிகவும் முதிர்ச்சியுடன் பதிலளித்தார்.
"நான் இதையெல்லாம் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. என்னுடைய கவனம் முழுவதும் விளையாட்டில் தான் இருக்கிறது. ஆனால், மக்கள் என்னைத் தேடுகிறார்கள், என்னைப் பற்றிப் பேசுகிறார்கள் என்று கேட்கும்போது நிச்சயமாகச் சந்தோஷமாக இருக்கிறது. அதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உணர்கிறேன். அவ்வளவுதான்.. அதன்பிறகு அதைக் கடந்து அடுத்த வேலையைப் பார்க்கச் சென்றுவிடுவேன்" என்று பதிலளித்தார்.
இந்தப் போட்டியில் வைபவ் அடித்த 171 ரன்கள், அண்டர்-19 ஒருநாள் போட்டிகளில் இந்திய வீரர் ஒருவரால் அடிக்கப்பட்ட இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் ஆகும். முதலிடத்தில் அம்பத்தி ராயுடு - 177 ரன்களுடன் இருக்கிறார். அவர் 2002 ஆம் ஆண்டில் அந்த சாதனையை நிகழ்த்தி இருந்தார். மேலும், ஒரு இன்னிங்ஸில் 14 சிக்ஸர்கள் அடித்து உலக சாதனையையும் வைபவ் படைத்தார்.


Click it and Unblock the Notifications