வாங்க சார், வணக்கம் சார்.. கும்ப்ளே நியமனம் குறித்து கோஹ்லி மகிழ்ச்சி!
பெங்களூரு: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக அனில் கும்ப்ளே நியமிக்கப்பட்டிருப்பது குறித்து டெஸ்ட் கேப்டன் விராத் கோஹ்லி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். கும்ப்ளே சார் பயிற்சியாளராக வந்துள்ளதன் மூலம் இந்திய அணிக்கு நிறைய பலன் கிடைக்கப் போகிறது என்றும் கோஹ்லி கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஒரு வருட காலத்திற்கு கும்ப்ளே நியமிக்கப்பட்டுள்ளார். 45 வயதாகும் கும்ப்ளே நியமனம் குறித்து பல வீரர்களும், முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இந்திய அணியின் வருங்கால கேப்டன் (தற்போது டெஸ்ட் கேப்டனாக மட்டும் இருக்கும்) கோஹ்லி, கும்ப்ளே நியமனத்தை வரவேற்றுள்ளார். கும்ப்ளேவுக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.
இதயப்பூர்வமாக வரவேற்கிறேன்
இதுகுறித்து கோஹ்லி தனது டிவிட்டரில் கூறுகையில், கும்ப்ளே சாருக்கு இதயப்பூர்வமான வரவேற்பு. உங்களுடன் இணைந்து செயல்பட ஆர்வமாக இருக்கிறேன். இந்திய கிரி்கெட்டுக்கு உங்களால் மிகப் பெரிய பலன்கள் கிடைக்கப் போகிறது என்று கூறியுள்ளார் கோஹ்லி.

வரவேற்பு
இந்த டிவிட்டுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதுவரை 4000க்கும் மேற்பட்ட முறை அது ரீட்வீட் செய்யப்பட்டுள்ளது. 12.000க்கும் மேற்பட்ட லைக்குகள் கிடைத்துள்ளன.

பிசிசிஐ நம்பிக்கை
முன்னதாக கும்ப்ளே நியமனத்தை அறிவித்த இந்திய கிரிக்கெட் வாரியம், கும்ப்ளேவின் செறிந்த அறிவும், அனுபவமும், இந்திய அணிக்கு நிறைய உதவிகரமாக இருக்கும் என நம்புவதாக கூறியிருந்தது.

கும்ப்ளே மகிழ்ச்சி
கும்ப்ளே கூறுகையில் இது மிகப் பெரிய பொறுப்பு. இதை ஏற்க தயாராக இருக்கிறேன். கோச்செல்லாம் பிறகுதான். முதலில் வீரர்கள்தான் முக்கியம். அவர்கள்தான் விளையாடப் போகிறார்கள். அவர்களுக்குத்தான் எப்போதும் முன்னுரிமை என்றார் கும்ப்ளே.

மேற்கு இந்தியத் தீவுகள் டூர்
கும்ப்ளேவின் முதல் டூர் மேற்கு இந்தியத் தீவுகள் பயணமாக இருக்கும். இதற்காக இந்த மாத இறுதியில் கோஹ்லி மற்றும் வீரர்களுடன் கும்ப்ளே இணையவுள்ளார். மேற்கு இந்தியத் தீவுகளில் இந்தியா சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.

கும்ப்ளே - கோஹ்லி தொடர்பு
கும்ப்ளே ஐபிஎல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் முன்பு இடம் பெற்றிருந்தபோது அவருடன் இணைந்து விளையாடிய அனுபவம் கோஹ்லிக்கு உள்ளது. எனவே இதுதான் கும்ப்ளேவை பயிற்சியாளராக்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்ய முக்கியக் காரணமாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications