
உற்சாகமடைந்த ரசிகர்கள்
கடந்த மாதம் 19ம் தேதி ஐபிஎல் போட்டிகள் துவங்கிய நிலையில், முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதிய சிஎஸ்கே வெற்றி பெற்றது. சரியான பயிற்சி இல்லாதது, கொரோனா நெருக்கடி இவற்றை தாண்டி இந்த வெற்றியை சிஎஸ்கே பெற்ற நிலையில், ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்தனர்.

கைகொடுக்காத ஸ்பின்னர்கள்
இந்நிலையில் அடுத்தடுத்த 3 போட்டிகளில் சிஎஸ்கே மிகுந்த தடுமாற்றத்திற்கு உள்ளாகி, தோல்விகளையே ரசிகர்களுக்கு பரிசாக அளித்தது. அந்த அணியில் எப்போதுமே ஸ்பின்னர்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த போட்டிகளில் பேட்ஸ்மேன்களும் ஸ்பின்னர்களும் கை கொடுக்காத நிலை காணப்பட்டது.

நெருக்கடிக்குள்ளான சிஎஸ்கே
அவ்வளவு தான் சிஎஸ்கேவின் பார்ம் போய்விட்டது. அவர்கள், தங்களது பேட்டிங் மற்றும் பௌலிங் ஆர்டர்களை மாற்ற வேண்டும், அதிரடி முடிவுகளை தோனி எடுக்க வேண்டும் என்று பல்வேறு விமர்சனங்களை அந்த அணியும் அணியின் கேப்டன் தோனியும் சந்தித்து வந்தனர்.

10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
அணியில் சிலபல மாற்றங்களை தோனி மேற்கொண்டாலும், முக்கிய வீரர்களை மாற்றும் முடிவை அவர் எடுக்கவில்லை. அத்தகைய மாற்றங்களை எடுப்பதை அவர் எப்போதும் ஊக்குவிக்காத நிலையில், தற்போது அந்த முடிவே அவருக்கு கை கொடுத்துள்ளது. நேற்றைய போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிஎஸ்கே இமாலய வெற்றி பெற்றுள்ளது.

சிறப்பான துவக்க வீரர்கள்
முதலில் ஆடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 179 ரன்கள் என்ற பெரிய இலக்கை கொடுத்தாலும் சிஎஸ்கேவின் துவக்க வீரர்கள் ஷேன் வாட்சன் மற்றும் பாப் டூ பிளசிஸ் ஆகியோர் முறையே 83 ரன்கள் மற்றும் 87 ரன்களை அடித்து அந்த அணியின் மிகப்பெரிய வெற்றிக்கு வழிகோலியுள்ளனர். இந்த போட்டி ரசிகர்களுக்கு தெறி அனுபவத்தை கொடுத்துள்ளது.

தோனி பாராட்டு
இந்த வெற்றியை சிஎஸ்கே தனது டிவிட்டர் பக்கத்தில் சிறப்பான பதிவுகளை போட்டு கொண்டாடிய நிலையில், கேப்டன் தோனியும் அவர்கள் இருவரையும் பாராட்டியுள்ளார். அவர்களின் வழக்கமான ஷாட்கள் திரும்ப வந்துள்ளதற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

3வது அரைசதம்
ரெய்னா அணியில் இல்லாத குறையை பாப் டூ பிளசிஸ் தீர்த்து வைத்துள்ளார். அவர் இந்த ரன்களின் மூலம் தனது 3வது அரைசதத்தை எடுத்துள்ளார். வெறுமனே 5 போட்டிகளில் அவர் இந்த ரன்களை குவித்துள்ளார். கடந்த போட்டிகளில் தன்னுடைய பாட்டி இறப்பு உள்ளிட்டவற்றால் மனநெருக்கடியில் இருந்த ஷேன் வாட்சனும் தற்போது பார்மிற்கு திரும்பியுள்ளார்.


Click it and Unblock the Notifications