போர்ட் ஆப் ஸ்பெயின் : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி அபாரமாக விளையாடி 121 ரன்களை சேர்த்தார்.இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி 29 சதங்களை பூர்த்தி செய்து இருக்கிறார்.
இதன் மூலம் கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேனின் சாதனையை விராட் கோலி சமன் செய்திருக்கிறார். இந்த நிலையில் ஒரே விஷயம் ஒரே மாதிரி ஒரே இடத்தில் நடந்திருப்பது தற்போது தெரிய வந்திருக்கிறது.

கிரிக்கெட் கடவுள் என்று ரசிகர்களால் போற்றப்படும் சச்சின் டெண்டுல்கரும் தனது 29 ஆவது டெஸ்ட் சதத்தை இதே போர்ட் ஆஃப் ஸ்பெயின் மைதானத்தில் தான் பூர்த்தி செய்தார். இதனை சச்சின் 2002 ஆம் ஆண்டு செய்திருந்தார். தற்போது 21 ஆண்டுகள் கழித்து அதே போர்ட் ஆஃப் ஸ்பெயின் மைதானத்தில் அதே மாதிரி விராட் கோலி தற்போது 29-வது சதத்தை அடித்திருக்கிறார். இந்த இரண்டு வரலாற்று ஒற்றுமையும் பார்த்து ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்து வருகின்றனர்.
இதன் மூலம் சச்சினுடைய அனைத்து சாதனைகளையும் விராட் கோலி முறியடிக்க வாய்ப்பு இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் விராட் கோலியின் இந்த சாதனையை பாராட்டியுள்ள சச்சின் டெண்டுல்கர், தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் இன்னொரு நாள், இன்னொரு சதம் சிறப்பாக விளையாடியிருக்கிறீர்கள் விராட் கோலி என்று பாராட்டி இருக்கிறார்.

இதேபோன்று விராட் கோலியின் மனைவியும் பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா ஷர்மா தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் விராட் கோலியின் புகைப்படத்தை போட்டு இதயம் சிம்பலை போட்டு இருக்கிறார். இந்த இன்னிங்ஸ் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் இந்தியாவுக்காக அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றிருக்கிறார். இதேபோன்று நடப்பாண்டில் இந்தியாவுக்காக அதிக ரன்கள் எடுத்த வீரர் அதிவேகமாக 76 சதம் அடித்த வீரர் போன்ற பல சாதனைகளை விராட் கோலி படைத்திருக்கிறார்.