அகமதாபாத்: சிஎஸ்கே போல் வீரர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் அணியை பார்த்ததில்லை என்று சென்னை அணியின் முன்னாள் வீரர் அம்பாதி ராயுடு தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியுடன் ஓய்வுபெற போவதாக சென்னை அணியின் அம்பாதி ராயுடு அறிவித்திருந்தார். இந்த நிலையில் குஜராத் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் சென்னை அணி வெற்றிபெற்று 5வது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்தது. இதையடுத்து அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து அம்பாதி ராயுடு ஓய்வை அறிவித்துள்ளார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஓய்வு குறித்து சமூக வலைதளங்களில் அம்பாதி ராயுடு, ஐபிஎல் இறுதிப்போட்டியில் வென்ற பின் ஓய்வுபெற்றுள்ளது மிகவும் எமோஷனலாக உள்ளது. இந்த சூழலில் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்தும் ஓய்வை அறிவிக்க விரும்புகிறேன். குழந்தையாக இருக்கும் போது கைகளில் பேட்டை எடுத்து டென்னிஸ் பந்துகளில் விளையாடிய போது, 30 ஆண்டுகள் தொடர்ச்சியாக கிரிக்கெட் விளையாடுவேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது குறித்து ராயுடு பேசுகையில், இதற்கு மேல் ஒரு ஃபினிஷிங்கை நான் கேட்கவே முடியாது. மிகச்சிறந்த அணிகளுடன் விளையாடி இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இன்றைய நாளின் வெற்றி, என் வாழ்க்கை முழுக்க நினைவில் இருக்கப் போகிறது. இதனை நினைத்து என் வாழ்நாள் முழுவதும் சிரித்துக் கொண்டே இருப்பேன். இந்த சூழலில் நான் என் தந்தை, என் குடும்பம் ஆகியோருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். என் தந்தையின்றி இந்த நிலைக்கு நான் வந்திருக்கவே முடியாது என்று தெரிவித்தார்.
அதேபோல், சென்னை அணிக்காக விளையாடியதை வாழ்நாளில் மறக்க முடியாது. சிஎஸ்கே அணி மட்டுமே வீரர்களின் மனநலனுக்கும், உடல் நலனுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் அணியாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் வீரர்கள் கவனப்பதற்காக அதிக முக்கியத்துவம் கொடுப்பதில் சிஎஸ்கே அணியே சிறந்தது என்று தெரிவித்துள்ளார்.