அகமதாபாத்: குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 203 ரன்களை விளாசி இருக்கிறது. இதுவரை ஐபிஎல் வரலாற்றில் குஜராத் அணி 200 ரன்களுக்கு மேல் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை ஒரு முறை சேஸ் செய்ததில்லை. இதனால் குஜராத் அணி புதிய வரலாறு படைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரின் 35வது லீக் போட்டியில் குஜராத் அணியை எதிர்த்து குஜராத் அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் டெல்லி அணிக்காக அபிஷேக் பொரல் - கருண் நாயர் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. சிராஜ் வீசிய முதல் ஓவரிலேயே அபிஷேக் போரல் 4, 6, 4 என்று வெளுத்து கட்டினார்.

ஆனால் 2வது ஓவரிலேயே அர்ஷத் கான் பவுலிங்கில் அபிஷேக் போரல் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து கேஎல் ராகுல் - கருண் நாயர் கூட்டணி இணைந்தது. கேஎல் ராகுல் களமிறங்கிய உடன் 4, 6, 6 என்று விளாச தொடங்கினார். இதனால் டெல்லி அணியின் ஸ்கோர் 4 ஓவர்களிலேயே 52 ரன்களை எட்டியது. ஆனால் 5வது ஓவரை வீசிய பிரசித் கிருஷ்ணா பவுலிங்கில் கேஎல் ராகுல் 28 ரன்களில் வெளியேறினார்.
தொடர்ந்து கருண் நாயர் - அக்சர் படேல் கூட்டணி இணைந்தது. இம்முறை கருண் நாயர் அட்டாக்கை தொடங்கினார். அர்ஷத் கான் வீசிய பவர் பிளேவின் கடைசி ஓவரில் பவுண்டரி, சிக்ஸ் உட்பட 14 ரன்கள் விளாசப்பட்டது. இதனால் பவர் பிளே ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 73 ரன்களை எடுத்தது. இந்த சீசனில் டெல்லி அணியின் சிறந்த பவர் பிளே ஸ்கோர் இதுதான்.
தொடர்ந்து அதிரடியாக ஆடிய கருண் நாயர் மீண்டும் பிரசித் கிருஷ்ணா பந்தில் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் இணைந்த அக்சர் படேல் - ஸ்டப்ஸ் கூட்டணி விக்கெட்டை இழக்காமல் பார்ட்னர்ஷிப்பை உருவாக்கியது. ஓவருக்கு ஒரு பவுண்டரி என்று விளாசி, டெல்லி அணியின் ஸ்கோரை 15 ஓவர்களில் 146 ரன்களாக உயர்த்தினர். அதிலும் ரஷித் கான் பவுலிங்கில் அடுத்தடுத்து 2 சிக்ஸ் விளாசியது ஆச்சரியத்தை கொடுத்தது.
சிறப்பாக ஆடிய ஸ்டப்ஸ் தேவையில்லாத ஷாட் விளையாடி சிராஜ் பவுலிங்கில் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து அக்சர் படேல் 38 ரன்களிலும், விப்ராஜ் நிகம் டக் அவுட்டாகியும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 18 ஓவர்களில் டெல்லி அணியின் ஸ்கோர் 188 ரன்களாக இருந்த போது, அஷுதோஷ் சர்மா - டோனவன் ஃபெரீரா கூட்டணி களத்தில் இருந்தது.
தொடர்ந்து இஷாந்த் சர்மா வீசிய 19வது ஓவரில் வெறும் 6 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட, கடைசி ஓவரை வீச சாய் கிஷோர் அழைக்கப்பட்டார். அந்த ஓவரின் 5வது பந்தில் அஷுதோஷ் சர்மா 19 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியாக டெல்லி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 203 ரன்களை குவித்து அசத்தியது.