அகமதாபாத்: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணியின் நட்சத்திர ஸ்பின்னரான ரஷித் கான் 4 ஓவர்களில் விக்கெட் ஏதுமின்றி 38 ரன்களை விட்டுக் கொடுத்துள்ளார். இந்த போட்டி மட்டுமல்லாமல் இந்த சீசன் முழுக்க இதுவரை 7 போட்டிகளில் ஆடியுள்ள ரஷித் கான், வெறும் 4 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தி இருக்கிறார்.
ஐபிஎல் தொடரில் குஜராத் அணியால் ரூ.18 கோடிக்கு ரீடெய்ன் செய்யப்பட்ட ஒரே வீரர் ரஷித் கான் மட்டும்தான். அந்த அணியின் கேப்டன் சுப்மன் கில் கூட ரூ.16.50 கோடிக்கு மட்டும் தக்க வைக்கப்பட்டிருந்தார். அந்த அளவிற்கு குஜராத் அணியில் ரஷித் கானுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அதற்கேற்ப ரஷித் கானின் ஆட்டமும் அற்புதமாக இருந்து வந்தது.

கடந்த 3 சீசன்களில் மட்டும் குஜராத் அணிக்காக 45 போட்டிகளில் ஆடியுள்ள ரஷித் கான் 56 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். குஜராத் அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பட்டியலில் ரஷித் கான் முதலிடத்தில் இருக்கிறார். ஆனால் இந்த சீசனில் ரஷித் கானின் பவுலிங் அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள ரஷித் கான் வெறும் 4 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தி இருக்கிறார். அவரால் கடந்த சில சீசன்களை போல் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை. டெல்லி அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் கூட 4 ஓவர்களில் விக்கெட் ஏதுமின்றி 38 ரன்களை விட்டுக் கொடுத்துள்ளார். அதிலும் மொத்தமாக 3 டாட் பால்களை மட்டுமே வீசி இருக்கிறார்.
கடந்த சில சீசன்களில் ரஷித் கான் பவுலிங் செய்ய வந்தாலே, அவரின் பந்துகளை பேட்ஸ்மேன்கள் எளிதாக தவிர்த்து ஆடுவார்கள். ஆனால் இந்த சீசனில் ரஷித் கான் வந்தாலே பேட்ஸ்மேன்கள் அட்டாக் செய்ய தொடங்கி இருக்கிறார்கள்.
அதாவது இந்த சீசனில் ரஷித் கானின் எகனாமி ரேட் மட்டும் 9.45 ஆகவும், பவுலிங் சராசரியாக 56.75ஆக உள்ளது. அதேபோல் ரஷித் கானின் ஒவ்வொரு ஆட்டத்திலும் அதிக சிக்சர்களை விட்டுக் கொடுத்து வருகிறார். இதனால் ரஷித் கான் தனது பவுலிங்கை மீள் பரிசோதனை செய்வதற்கான நேரம் வந்திவிட்டதாக ரசிகர்களிடையே விமர்சனங்கள் எழுந்துள்ளன.