அகமதாபாத்: குஜராத் அணிக்கு எதிரான போட்டியின் போது முக்கியமான நேரத்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தது ஆட்டத்தின் போக்கை மாற்றிவிட்டதாக ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். பவுலிங்கில் கூடுதலாக 20 ரன்களை விட்டுக் கொடுத்ததாக கூறிய சஞ்சு சாம்சன், சேஸிங் செய்தும் போட்டிகளை வெல்ல முயற்சித்ததாக தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான லீக் போட்டியில் குஜராத் அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 217 ரன்களை விளாசியது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி 19.2 ஓவர்களில் 159 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.

இந்த தோல்வியின் காரணமாக ராஜஸ்தான் அணி புள்ளிப் பட்டியலில் 7வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதுவரை 5 போட்டிகளில் ஆடிய ராஜஸ்தான் அணி, 2 வெற்றி, 3 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று 7வது இடத்தில் இருக்கிறது. இந்த தோல்விக்கு பின் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேசுகையில், பவுலிங்கின் போது நாங்கள் கூடுதலாக 15 முதல் 20 ரன்களை கூடுதலாக விட்டுக் கொடுத்துவிட்டோம்.
அதேபோல் பேட்டிங்கின் போது முக்கியமான நேரத்தில் விக்கெட்டை பறிகொடுத்தோம். குறிப்பாக ஹெட்மயர் சிக்ஸ், பவுண்டரி என்று விளாசி தள்ளிய போது, என் விக்கெட்டை பறிகொடுத்துவிட்டேன். அங்குதான் ஆட்டம் எங்களின் கைகளில் இருந்து நழுவியது. பவுலிங்கில் ஆர்ச்சரின் செயல்பாடுகள் சிறப்பாக அமைந்தது. சுப்மன் கில் விக்கெட்டை திட்டமிட்டபடி எடுக்க முடியவில்லை.
ஏனென்றால் நாங்கள் திட்டமிட்டது வேறு.. ஆனால் செயல்படுத்திய திட்டம் வேறு.. அடுத்த போட்டியில் எப்படி செயல்பட வேண்டும் என்பதை நாளை பார்க்க வேண்டும். சில நேரங்களில் டிஃபென்ஸில் மட்டுமல்லாமல், சேஸிங்கில் போட்டிகளை வெல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். டாஸ் முடிவு குறித்து போட்டிக்கு பின் மாற்றி செய்திருக்கலாமா என்று தோன்றுவது சாதாரண விஷயம்தான். ஆனால் ஒரு அணியாக டிஃபென்ஸில் மட்டுமல்லாமல் சேஸிங்கிலும் வெல்ல முயற்சித்தோம் என்று தெரிவித்தார்.