அகமதாபாத்: குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ரியான் பராக் அவுட் கொடுக்கப்பட்ட முறை சர்ச்சையாகி உள்ளது. ரியான் பராக்கின் பேட் தரையில் உரசிய நிலையில், அதே நேரத்தில் பந்து பேட்டினை கடந்து செல்கிறது. ஆனால் 3வது நடுவர் பேட் தரையில் உரசியதை கண்டு கொள்ளாமல் அவுட் கொடுத்ததால், நடுவர்களுடன் ரியான் பராக் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ஐபிஎல் தொடரின் 23வது லீக் போட்டியில் குஜராத் அணியை எதிர்த்து ராஜஸ்தான் அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 217 ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடிய சாய் சுதர்சன் 53 பந்துகளில் 82 ரன்களையும், ஷாரூக் கான் 20 பந்துகளில் 36 ரன்களையும் விளாசி தள்ளினர்.

இதனைத் தொடர்ந்து 218 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் ராஜஸ்தான் அணிக்கு சஞ்சு சாம்சன் - ஜெய்ஸ்வால் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் அர்ஷத் கான் வீசிய 2வது ஓவரில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த நிதீஷ் ராணா 1 ரன்னில் சிராஜ் வேகத்தில் பெவிலியன் திரும்பினார். இதன்பின் சாம்சன் - ரியான் பராக் கூட்டணி இணைந்தது.
இருவரும் அதிரடியாக ரன்களை குவிக்க, ராஜஸ்தான் அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. அதிலும் ரியான் பராக் ஸ்டைலிஷ் சிக்சர்களை அடுத்தடுத்து பறக்கவிட்டார். இதனால் 6 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 57 ரன்களை குவித்திருந்தது. இந்த நிலையில் 7வது ஓவரை வீசுவதற்காக இம்பேக்ட் பிளேயரான கெஜ்ரோலியா அழைக்கப்பட்டார்.
அந்த ஓவரின் 4வது பந்து ரியான் பராக் பேட்டில் பட்டு விக்கெட் கீப்பர் பட்லரிடம் கேட்சானது. நடுவர் அவுட் கொடுக்க, திடீரென ரியான் பராக் ரிவ்யூ கோரினார். அப்போது பந்து பேட்டை கடந்து செல்லும் போது, பேட் தரையை உரசியது. இதனையறிந்தே ரியான் பராக் உடனடியாக ரிவ்யூ கோரியது தெரிய வந்தது. ஆனால் 3வது நடுவர் சாதாரணமாக பந்து - பேட் உரசியதா என்று பார்த்து, அவுட் கொடுத்தார்.
அப்போது ரியான் பராக் எனது பேட் தரையில் உரசியதால் எழுந்த சத்தம் அது. மீண்டும் ஒருமுறை சோதனை செய்து பார்க்கலாமே என்று நடுவரிடம் கேட்க, அதற்கு கள நடுவர்கள் அவுட் கொடுத்து வெளியில் அனுப்பினர். இதனால் ஏமாற்றம் அடைந்த ரியான் பராக், களத்தில் இருந்து வெளியேற மனமின்றி 26 ரன்களில் பெவிலியனை நோக்கி நடந்தார். அப்போது அவரது தோளில் தட்டிக் கொடுத்து சிராஜ் அனுப்பி வைத்தார். இதனால் ரியான் பராக் விக்கெட்டா, விக்கெட் இல்லையா என்பது சர்ச்சையாகி உள்ளது.