அகமதாபாத்: ஐதராபாத் அணியின் நட்சத்திர வீரர் அபிஷேக் சர்மாவுக்கு 3வது நடுவர் நாட் அவுட் கொடுத்த முடிவை ஏற்காமல், குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் நடுவர்களுடன் கடுமையான மோதலில் ஈடுபட்ட சுப்மன் கில்லை, ஐதராபாத் அணியின் வீரரான அபிஷேக் சர்மா கட்டுப்படுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடரின் 51வது லீக் போட்டியில் குஜராத் அணியை எதிர்த்து ஐதராபாத் அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 224 ரன்களை குவித்தது. இந்தப் போட்டியில் குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் 38 பந்துகளில் 76 ரன்கள் எடுத்த போது ரன் அவுட்டாகி வெளியேறினார்.

அவருக்கு 3வது நடுவர் அவுட் கொடுக்கப்பட்டது சர்ச்சையான நிலையில், ஓய்வறைக்கு சென்ற சுப்மன் கில் 4வது நடுவருடன் நேரடியாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவரை குஜராத் அணியின் நெஹ்ரா மற்றும் விக்ரம் சொலங்கி ஆகியோர் கட்டுப்படுத்தி அமர வைத்தனர். இந்த சம்பவம் மறப்பதற்குள் சுப்மன் கில் களத்தில் மீண்டும் நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
14வது ஓவரை வீச பிரசித் கிருஷ்ணா அழைக்கப்பட்டார். அந்த ஓவரின் 4வது பந்தை அபிஷேக் சர்மா எதிர்கொண்ட போது, பந்து அவரின் கால்களில் அடித்து சென்றது. அப்போது குஜராத் அணி வீரர்கள் அவுட் என்று முறையீடு செய்த போது, நடுவர் அவுட் கொடுக்கவில்லை. இதன்பின் குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் டிஆர்எஸ் முறையீடு செய்தார்.
அப்போது 3வது நடுவர் பார்த்த போது, பந்தின் இம்பேக்ட் பிட்சிங் அவுட் சைட் ஆஃபில் இருந்தது தெரிய வந்தது. ஆனால் விக்கெட்டை ஹிட்டிங் என்று காட்டியது. இதன் காரணமாக உடனடியாக 3வது நடுவர் அம்பயர்ஸ் கால் என்று தீர்ப்பு வழங்கினார். இதனால் குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் களத்திலேயே நடுவர்களிடம் கொந்தளித்தார்.
அது எப்படி ஹிட்டிங் விக்கெட் என்று வந்தபின், தீர்ப்பு நாட் அவுட் வழங்கப்பட்டது என்று நீண்ட நேரமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் சுப்மன் கில் கடுமையான வார்த்தைகளை பேசிய போது, அவரின் நண்பரும், ஐதராபாத் அணியின் நட்சத்திர தொடக்க வீரருமான அபிஷேக் சர்மா அவரை கட்டுப்படுத்தினார். இதன்பின் கோபத்தில் சுப்மன் கில் அங்கிருந்து வெளியேறினார்.