மும்பை: 2007 டி20 உலகக்கோப்பை மற்றும் 2011ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பையை இந்திய அணி வெல்வதற்கு முக்கியமான காரணமாக அமைந்தவர் யுவராஜ் சிங். கிரிக்கெட் களத்தில் எவ்வளவு துடிப்புடன் இருந்தாரோ, அதேபோல் களத்திற்கு வெளியேவும் ஏராளமான சர்ச்சைகளில் சிக்கியவர். இரவு நேர பார்ட்டிகளில் பங்கேற்பதோடு, பாலிவுட் நாயகிகள் ஏராளமானோருடன் காதலில் இருந்திருக்கிறார்.
கிம் ஷர்மா, தீபிகா படுகோனே, ரியா சென், லட்சுமி ராய் என்று அந்த பட்டியல் நீண்டு கொண்டே போகும். இந்த நிலையில் 2007-08 ஆண்டில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடியது. அந்த நேரத்தில் பாலிவுட் நடிகை ஒருவர் தன்னை பின் தொடர்ந்து வந்து நேரம் செலவிட்டு சென்ற சம்பவம் குறித்து யுவராஜ் சிங் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து ஆடம் கில்கிறிஸ்ட், மைக்கில் வாஹன் உள்ளிட்டோருடன் பாட்கேஸ்ட் ஒன்றில் உரையாடிய யுவராஜ் சிங், 2007-08 ஆண்டில் நான் பாலிவுட் நடிகை ஒருவரை டேட்டிங் செய்து கொண்டிருந்தேன். அவரின் பெயரை என்னால் கூற முடியாது. ஏனென்றால் அவர் தற்போது பாலிவுட்டின் உச்சத்தில் இருப்பதோடு, அனுபவம் வாய்ந்தவர்.
அப்போது ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி கொண்டிருந்தோம். அதேநேரத்தில் அந்த நடிகையும் அடிலெய்டில் படப்பிடிப்பிற்காக வந்திருந்தார். அவரிடம், இந்த நேரத்தில் நாம் சந்திக்க வேண்டாம் என்று கூறியிருந்தேன். ஆனால் அவரோ, பேருந்தில் என்னை பின் தொடர்ந்து கேன்பெர்ரா வரை வந்துவிட்டார். அப்போது 2 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்திருந்தது.
நானும் சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்தவில்லை. போதுமான ரன்களையும் குவிக்கவில்லை. அப்போது அந்த நடிகை தொடர்ந்து வந்த போது, உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டேன். அதற்கு அவர், உன்னுடன் நேரம் செலவிட வேண்டும் என்று கூறினார். அதன்பின் இரவு நேரங்களில் சந்தித்து அவருடன் உரையாடுவேன்.
அவரிடம், எனது சினிமா வாழ்க்கையில் நீயும் மேலே வர வேண்டும்.. நானும் கிரிக்கெட்டில் அடுத்த கட்டம் செல்ல வேண்டும்.. நான் என்ன சொல்கிறேன் என்று புரிகிறதா என்று பேசிக் கொண்டிருந்தோம். பின்னர் அடுத்த நாள் காலையில் கான்பெர்ராவில் இருந்து அடிலெய்ட் புறப்பட தயாராகி கொண்டிருந்தோம். அப்போது எனது சூட்கேஸை முதல்நாள் இரவிலேயே நடிகை தான் தயார் செய்து கொடுத்தார்.
ஏனென்றால் வீரர்களின் உடைமைகள் அனைத்தும் முதல் நாள் இரவு அனுப்பிவிடுவோம். பின்னர் இந்திய அணி பேருந்தில் ஏறுவதற்கு 20 நிமிடங்கள் இருக்கும் போது, எனது ஷூ-க்களை எங்கே என்று கேட்டேன். அப்போது தான் அந்த நடிகை ஷூ-வையும் சேர்த்து சூட்கேஸில் அனுப்பியது தெரிய வந்தது. வெறும் கால்களில் எப்படி பேருந்தில் செல்வேன் என்று குழம்பி நின்றேன்.

பின்னர் வேறு வழியில்லாமல் அந்த நடிகையின் பிங்க் நிறத்தினாலான காலணியை மாட்டிக் கொண்டு பேருந்தில் ஏறினேன். அதனை பார்த்த சக வீரர்கள், கைகளை தட்டி உற்சாகப்படுத்தினர். அந்த சம்பவத்தை மறக்கவே முடியாது என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோ வெளியான சில நிமிடங்களிலேயே அந்த நடிகை யார் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்தது.
2007-08 காலக்கட்டத்தில் யுவராஜ் சிங், நடிகை தீபிகா படுகோனேவுடன் காதலில் இருந்தார். 2007 டி20 உலகக்கோப்பையின் போது யுவராஜ் சிங்கை உற்சாகப்படுத்துவதற்காக தென்னாப்பிரிக்கா வந்தார். அதன்பின் அவரின் பிறந்தநாள் விழாவையும் தீபிகா ஒருங்கிணைத்திருந்தார். தொடர்ந்து ஓம் ஷாந்தி ஓம் படத்திற்கு பின் "பச்னா ஹே ஹசீனோ" படத்தின் படப்பிடிப்பு ஆஸ்திரேலியாவில் தான் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.