கின்னஸ் சாதனை படைத்த கிரிக்கெட் வீரர் மோசடி வழக்கில் கைது.. தல தோனி பெயரிலும் ஏமாற்ற முயற்சி
விஜயவாடா: 82 மணி நேரம் தொடர்ச்சியாக கிரிக்கெட் விளையாடி கின்னஸ் உலக சாதனை படைத்த கிரிக்கெட் வீரர் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐயின் வீரர்கள் தேர்வுக்குழு தலைவராக இருப்பவர் எம்எஸ்கே பிரசாத். அவர் கடந்த வாரம் விஜயவாடா சைபர் கிரைம் காவல் நிலையத்தில் ஒரு பரபரப்பு புகாரை அளித்தார். அதாவது, நாகராஜூ என்பவர் ட்ரூ காலர் என்ற செல்போன் ஆப் வழியாக தனது பெயரை எம்எஸ்கே பிரசாத் என பதிவு செய்து, தான் பேசுவதுபோல் பேசி ரூ.5 லட்சம் வரை மோசடி செய்துள்ளதாக கூறியிருந்தார்.

இந்த புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில் நாகராஜுவை போலீசார் கைது செய்துள்ளனர். அவர், கடந்த 2016ம் ஆண்டு 82 மணி நேரம் தொடர்ச்சியாக கிரிக்கெட் விளையாடி கின்னஸ் உலக சாதனை படைத்தவர். ரஞ்சி டிராபி போட்டியில் ஆந்திர பிரதேச அணிக்காகவும் விளையாடியுள்ளார்.
எம்எஸ்கே பிரசாத்தின் குரலில் பேசி தொழிலதிபர்களை ஏமாற்ற முயற்சி செய்த புகாரின் அடிப்படையில் கன்னாவரம் விமானநிலையம் அருகே நாகராஜு கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து இருசக்கர வாகனம் மற்றும் ரூ.1.8 லட்சம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்திருக்கின்றனர்.
முன்னதாக, தோனி பெயரில் பயிற்சி மையம் தொடங்க உள்ளேன், பிரபல அமைச்சரின் உதவியாளர் என பலமுறை நாகராஜூ மோசடியில் ஈடுபட்டுள்ளார். தற்போது பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் பெயரையே பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு போலீசில் சிக்கிக் கொண்டார்.


Click it and Unblock the Notifications