ராஜ்கோட்: ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன் எடுத்தவர்கள் பட்டியலில் குஜராத் லயன்ஸ் அணி கேப்டன் சுரேஷ் ரெய்னா மீண்டும் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
10-ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஹைதராபாத்தில் கோலாகலமாக புதன்கிழமை தொடங்கியது. ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன் குவித்தவர்கள் வரிசையில் பெங்களூர் கேப்டன் விராட் கோஹ்லி (4,110) ரன்களுடன் முதலிடத்தில் இருந்தார்.

அதைத் தொடர்ந்து 4,098 ரன்களுடன் சுரேஷ் ரெய்னா இரண்டாம் இடம் பிடித்திருந்தார். மும்பை கேப்டன் ரோஹித் சர்மா 3,874 ரன்களுடன் 3 -ஆம் இடத்தில் இருந்தார்.
இந்நிலையில், 10வது ஐபிஎல் சீசன் 3வது லீக் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் குஜராத் அணி கேப்டன் சுரேஷ் ரெய்னா, 34 ரன்கள் எடுத்த போது ஒரு சாதனை நிகழ்த்தினார். அதாவது ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்தார். இதுவரை 148 போட்டிகளில் பங்கேற்றுள்ள ரெய்னா 4166 ரன்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார்.
பெங்களூரு கேப்டன் விராட் கோஹ்லி, 139 போட்டிகளில் பங்கேற்று 4110 ரன்கள் எடுத்துள்ளார். தற்போது காயம் காரணமாக ஓய்வில் உள்ள கோஹ்லி, மீண்டும் அணிக்கு திரும்பியவுடன் முதலிடத்துக்கான போட்டி இவர்களுக்குள் கடுமையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.