அகமதாபாத்: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் சென்னை அணியை எதிர்த்து விளையாடவுள்ள டிஃபண்டிங் சாம்பியனான குஜராத் அணியை பற்றி பார்க்கலாம்.
திண்ணையில் படுத்திருந்தவனுக்கு திடீரென கல்யாணம் நடந்ததாம் என்ற பழமொழிக்கு ஏற்ப, சென்னை - மும்பை இடையிலான சண்டைக்கு இடையே திடீரென உள்ளே புகுந்த குஜராத் அணி அறிமுகமான முதல் தொடரிலேயே கோப்பையை வென்று மிரள வைத்துள்ளது.
கடந்த சீசனில் ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாக குஜராத் அணியை குறைத்து மதிப்பிட்ட அத்தனை பேருக்கும் மறக்க முடியாத பதிலடியை கொடுத்து ஹர்திக் பாண்டியா மிரட்டிவிட்டார்.

அதனால் குஜராத் அணியை நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலும் அவ்வளவு எளிதாக குறைத்து மதிப்பிட யாருக்கும் மனம் வராது. இன்னும் சொல்லப் போனால் பட்டை தீட்டப்பட்ட வைரமாகவே குஜராத் அணியின் வீரர்கள் களம் புக காத்திருக்கின்றனர். வழக்கம் போல் மிரட்டலான ஃபார்மில் சுப்மன் கில், அனுபவ வீரர் விருத்திமான் சாஹா இருக்கிறார்கள். இதுமட்டுமல்லாமல் கூடுதல் விக்கெட் கீப்பராக கே.எஸ்.பரத்தையும் பேக் அப்பில் வைத்துக் கொண்டுள்ளது.
மூன்றாவது இடத்தில் வில்லியம்சன் நிச்சயமாக வரப் போகிறார். டாப் 3 பேட்ஸ்மேன்கள் மூவரும் நிதானமாக ஆடக் கூடியவர்கள் என்பதால், சில போட்டிகளில் குஜராத் அணி நிச்சயம் பின்னடைவை சந்திக்கும். ஆனால் 4வது இடத்தில் ஹர்திக் பாண்டியா, 5வது இடத்தில் டேவிட் மில்லர், 6வது இடத்தில் ராகுல் டிவாட்டியா, 7வது இடத்தில் ரஷீத் கான் என்று வலிமையான மிடில் ஆர்டர் குஜராத் அணியின் பலம்.

இன்னும் சொல்லப் போனால், 15 ஓவர்களில் டாப் 3 பேட்ஸ்மேன்கள் 120 ரன்களை கொண்டு வந்து கொடுத்தால், அடுத்த 5 ஓவரில் அணியின் ஸ்கோரை நிச்சயம் 200 ரன்களுக்கு எடுத்து செல்லும் வல்லமை கொண்டது குஜராத் அணியின் மிடில் ஆர்டர். அதன் பின்னர் பந்துவீச்சாளர்கள் என்று பார்த்தால் முகமது ஷமி, சாய் கிஷோர், அல்ஜாரி ஜோசப், உனாத்கட், ஷிவம் மாவி ஆகியோர் சிறப்பாக இருக்கிறார்கள்.
இவர்களில் ரஷீத் கானின் 4 ஓவர்களை எதிரணிகள் அடிக்க வேண்டும் என்பதே அசாதாரணம் தான். அதேபோல் அல்ஜாரி ஜோசப் வாழ்வின் உச்சக்கட்ட ஃபார்மில் இருக்கிறார். பிட்ச்சில் சிறிதாக பவுன்ஸ் இருந்தாலும், எதிரணியின் நிலைமை மிகவும் கஷ்டம்தான். அதேபோல் முகமது ஷமி பவர் ப்ளேயில் என்ன செய்வார் என்பது அனைவருக்கும் தெரியும். இதுமட்டுமல்லாமல் ஹர்திக் பாண்டியா, ராகுல் டிவாட்டியா இருவரும் தலா 2 ஓவர்கள் வீசினாலும் போதுமானதே.

இன்னும் சொல்லப் போனால் குஜராத் அணி பேட்டிங்கை விடவும் பந்துவீச்சிலும் இன்னும் பலமாக இருப்பதால், அனைத்து அணிகளுக்கு சவால் அளிக்க முடியும். ஆனால் வெவ்வேறு மைதானங்களில் ஆட்டம் விளையாடப்பட உள்ளதால், குஜராத் அணியின் யுக்திகள் மாறிக் கொண்டே இருக்க வேண்டும். அதேபோல் இம்பேக்ட் பிளேயர் விதிமுறையால் குஜராத் அணி அதிக பாதிப்புகளை சந்திக்க வாய்ப்புகள் உள்ளது.
ஏனென்றால் இம்பேக்ட் பிளேயராக வருவதற்கு ஒடியன் ஸ்மித், ஜோஷ்வா லிட்டல் இருந்தாலும், பேட்டிங்கில் உதவி செய்வதற்கு எந்த வீரரும் பெரியளவில் இல்லை என்பதால், சேஸிங் செய்யும் போது குஜராத் அணி கஷ்டப்படும் என்று பார்க்கப்படுகிறது. இருப்பினும் டிஃபண்டிங் சாம்பியன் என்பதால் குஜராத் அணியை அவ்வளவு எளிதாக புறந்தள்ளிவிட முடியாது.