சென்னை: இந்தியாவின் டி.குகேஷ் உலக செஸ் சாம்பியனாகத் திகழ்ந்து வரும் நிலையில், அவரை எதிர்த்துப் போட்டியிடப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. ஒருவேளை அந்தப் போட்டியாளர் நம்ம ஊர் பையன் பிரக்ஞானந்தாவாக இருந்தால் எப்படி இருக்கும்?
ஆம், அப்படி ஒரு கனவுப் போட்டி நிகழ்ந்தால், உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் மீண்டும் இந்தியாவிற்கே, அதுவும் சென்னைக்கே வர வாய்ப்புள்ளது என்று ஃபிடே (FIDE) துணைத் தலைவர் விஸ்வநாதன் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

வரும் மார்ச் - ஏப்ரல் மாதங்களில் 'கேண்டிடேட்ஸ் செஸ் தொடர்' நடைபெறவுள்ளது. இதில் உலகின் டாப் 8 வீரர்கள் மோதுகிறார்கள். இதில் வெற்றி பெறுபவர் தான், நடப்பு உலக சாம்பியனான குகேஷை எதிர்த்து இறுதிப்போட்டியில் விளையாடுவார்.
கேண்டிடேட்ஸ் தொடரில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் ஆர். பிரக்ஞானந்தாவும் களமிறங்குகிறார். இதில் அவர் வெற்றி பெற்றுவிட்டால், உலகக் கோப்பைக்கான இறுதிப்போட்டியில் குகேஷ் vs பிரக்ஞானந்தா என்ற இந்தியர்களுக்கு இடையிலான போட்டி அரங்கேறும்.
ஜெய்ப்பூர் இலக்கியத் திருவிழாவில் இது குறித்துப் பேசிய விஸ்வநாதன் ஆனந்த், "ஒருவேளை பிரக்ஞானந்தா தகுதி பெற்றுவிட்டால், அது இருவருக்கும் மிக மிக உணர்ச்சிகரமான ஒரு போட்டியாக இருக்கும். இது சாதாரண போட்டியாக இருக்காது. அதுவும் சென்னையில் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்" என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், "யோசித்துப் பாருங்கள்.. இருவரும் ஒரே ஊர், ஒரே பள்ளி, ஒரே மாதிரியான சூழலில் வளர்ந்தவர்கள். நான் இருவருக்கும் வழிகாட்டியாக இருந்துள்ளேன். அப்படி இருக்கையில், இவர்கள் மோதும் போட்டி மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்" என்றார்.
ஒருவேளை பிரக்ஞானந்தா வெல்லாமல், அமெரிக்க வீரர்களான ஃபேபியானோ கருவானா அல்லது ஹிகாரரு நகமுரா ஆகியோர் இறுதிப்போட்டிக்கு வந்தால் நிலைமை வேறு மாதிரி இருக்கும். "அவர்கள் வந்தால் நிச்சயம் 'மைண்ட் கேம்' ஆடுவார்கள். போட்டி களத்தில் உரசல்கள் இருக்கும். ஆனால் பிரக்ஞானந்தா வந்தால், அது ஆரோக்கியமான போட்டியாக இருக்கும்" என்று ஆனந்த் கணித்துள்ளார்.
கடைசியாக 2013-ம் ஆண்டு சென்னையில் தான் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. அப்போது விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் மேக்னஸ் கார்ல்சன் மோதினர். அதற்குப் பிறகு 13 ஆண்டுகள் கழித்து, மீண்டும் சென்னை அந்த வாய்ப்பைப் பெறுமா என்பது பிரக்ஞானந்தாவின் கையில் தான் உள்ளது.
குகேஷ் மற்றும் பிரக்ஞானந்தா ஆகிய இரு இளம் சிங்கங்களும் உலகக் கோப்பைக்காக சென்னையில் மோதினால், அது இந்திய விளையாட்டுத் துறையின் மிகப்பெரிய திருவிழாவாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.