இங்கிலாந்து வீரரை மிரட்டிய இந்திய பந்துவீச்சாளர் குர்னூர் பிராருக்கு தண்டனை.. ஐசிசி அதிரடி நடவடிக்கை
கார்டிஃப்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அதிரடியாகப் பந்துவீசிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் குர்னூர் பிரார், களத்தில் விதிமுறைகளை மீறி ஆபத்தான முறையில் பந்தை எறிந்ததற்காக ஐசிசி-யால் அதிகாரப்பூர்வமாக எச்சரிக்கப்பட்டு இருக்கிறார். மேலும், அவருக்கு ஒரு டிமெரிட் புள்ளி தண்டனையாக வழங்கப்பட்டுள்ளது.
பர்மிங்காமில் நடைபெற்ற இந்தப் போட்டியின் 8வது ஓவரை வீசிய குர்னூர் பிரார், பந்தை தடுத்து ஆடிய பேட்ஸ்மேன் பென் டக்கெட்டை நோக்கி ஆக்ரோஷமாகப் பந்தைத் தூக்கி எறிந்தார். இது ஐசிசி-யின் நடத்தை விதிகளின் கீழ் 'ஆபத்தான மற்றும் ஒழுங்கற்ற முறையில் பந்தை எறிதல்' (விதி 2.9) என்ற பிரிவை மீறிய குற்றமாகும்.

இந்தப் போட்டியில் குர்னூர் பிரார் வீசிய ஒரு ஓவரில் அடுத்தடுத்து சிக்ஸ் மற்றும் ஃபோர் அடித்து இருந்தார் பென் டக்கெட். அப்போது கோபம் அடைந்த பிரார் டக்கெட் கிரீஸை விட்டு வராத போது தேவையின்றி அவர் நின்று இருந்த பக்கத்தின் ஸ்டம்ப்புகளை நோக்கி பந்தை எறிந்தார். பந்து டக்கெட் மீது படாத போதும் ஆபத்தான முறையில் சென்றது. மேலும், அவரை பார்த்து கோபமாக மிரட்டுவது போல பேசினார். ஆனால், டக்கெட் சிரித்து விட்டு அதை கண்டு கொள்ளாமல் சென்றார்.
இந்த சம்பவம் தொடர்பாக போட்டி நடுவரான ரிச்சி ரிச்சர்ட்சன் அளித்த இந்தத் தண்டனையை குர்னூர் பிரார் மறுப்பு கூறாமல் ஏற்றுக் கொண்டார். இதனால் எவ்வித விசாரணையும் இன்றி அவருக்கு அதிகாரப்பூர்வ எச்சரிக்கையும், ஒரு டிமெரிட் புள்ளியும் வழங்கப்பட்டது. கடந்த 24 மாதங்களில் குர்னூர் செய்த முதல் தவறு இதுவாகும். அந்தப் போட்டி தான் அவருக்கு ஒருநாள் அறிமுகப் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. குர்னூர் பிரார் 9 ஓவர்களில் 61 ரன்கள் கொடுத்து இங்கிலாந்து தொடக்க வீரர்களான ஜேக்கப் பெத்தேல் மற்றும் பென் டக்கெட் ஆகிய 2 விக்கெட்டுகளை வீழ்த்தி திருப்புமுனையை ஏற்படுத்தினார். மேலும் ஜோஸ் பட்லரின் முக்கிய கேட்ச்சையும் பிடித்து அணியின் வெற்றிக்கு உதவினார். அவர் இனி தொடர்ந்து தவறுகள் செய்து நான்கு டிமெரிட் புள்ளிகள் பெற்றால் சில போட்டிகளில் ஆட தடை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
