கவுகாத்தி: தென்னாப்பிரிக்காவிடம் படுதோல்வி அடைந்த இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு எதிராக ரசிகர்கள் மைதானத்தில் கோஷமிட்டதும், அதற்கு முகமது சிராஜ் மற்றும் உதவி பயிற்சியாளர் எதிர்வினையாற்றிய சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் ஒரு ரசிகரை போலீஸ் பிடித்துச் சென்றுள்ளது.
கவுகாத்தியில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 408 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து, 0-2 என்ற கணக்கில் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்தது. ஏற்கனவே நியூசிலாந்து அணியிடம் 0 - 3 என சொந்த மண்ணில் இந்திய அணி தோல்வி அடைந்து இருந்தது. அப்போது கம்பீர் பல முடிவுகளை எடுத்ததை அடுத்து ரோஹித் சர்மா, விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றனர்.

அதன்பின் தன் விருப்பப்படி வீரர்களை தேர்வு செய்தார் கம்பீர். அப்படி இருந்தும் இந்திய அணி தென்னாப்பிரிக்க அணியிடம் படுதோல்வி அடைந்தது. அதனால் ரசிகர்கள் பயிற்சியாளர் கம்பீர் மீது அதிருப்தியை வெளிப்படுத்தினர். கவுஹாத்தியில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி முடிந்த பிறகு பரிசளிப்பு விழாவுக்காக வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் மைதானத்தில் கூடியிருந்தனர்.
அப்போது பார்வையாளர்கள் பகுதியில் இருந்த ஒரு தரப்பு ரசிகர்கள், பயிற்சியாளர் கவுதம் கம்பீரை குறிவைத்தனர். "கம்பீர் ஹாய் ஹாய் (கம்பீர் ஒழிக)", "கம்பீர் கோ பேக்" என்று ஆக்ரோஷமாக முழக்கமிட்டனர். கம்பீர் அவர்கள் பக்கம் திரும்பினாலும், எந்த எதிர்வினையும் ஆற்றாமல் அமைதியாக இருந்தார்.
ஆனால், வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜால் இதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவர் உடனடியாக ரசிகர்களை நோக்கி கையை காட்டி, "வேண்டாம்.. நிறுத்துங்கள்" என்று சைகை செய்தார். ஆனாலும் ரசிகர்கள் விடவில்லை. தொடர்ந்து கூச்சலிட்டனர்.
இதையடுத்து சிராஜும், பேட்டிங் உதவி பயிற்சியாளர் சிதன்ஷு கோடக்கும் பவுண்டரி லைன் அருகே ஆவேசமாகச் சென்றனர். அங்கே ரசிகர்களைப் பார்த்துக் கோடக் சத்தம்போட்டார். "இந்தியாவுக்காக ஒரு மனுஷன் இவ்வளவு பேசுறாரு.. உழைக்கிறாரு.. அவருக்கு எதிராகவா இப்படி கத்துறீங்க?" என்று கோடக் ரசிகர்களைப் பார்த்துக் கத்தினார்.
விவகாரம் பெரிதாவதை உணர்ந்த பிசிசிஐ நிர்வாகிகள், பாதுகாப்பு அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். உடனடியாக அங்கு வந்த போலீஸ், கோஷமிட்டவர்களில் ஒருவரை அடையாளம் கண்டு, மைதானத்திலிருந்தே அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர். அவர் மீது வழக்கு பதியப்பட்டதா? என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
நியூசிலாந்து தொடரைத் தொடர்ந்து, தென்னாப்பிரிக்கா தொடரிலும் இந்தியா 'ஒயிட்வாஷ்' ஆனதால் ரசிகர்கள் மிகுந்த விரக்தியில் உள்ளனர். சொந்த மண்ணில் கடந்த 7 போட்டிகளில் 5-ல் இந்தியா தோற்றுள்ளது, 66 ஆண்டுகளில் இதுவே முதல்முறை. இந்தத் தொடர் தோல்விகளே ரசிகர்களின் இந்த ஆவேசத்திற்குக் காரணமாக அமைந்துள்ளது.