ஆண்டின் முதல் தொடர்
இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் சர்வதேச டி20 போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. கவுஹாத்தியில் நேற்று இந்த தொடரின் முதல் போட்டி நடைபெறவிருந்தது.
ரசிகர்கள் ஏமாற்றம்
அசாம் மாநிலம் கவுஹாத்தியில் நேற்று நடைபெறவிருந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, இலங்கையை பேட்டிங் செய்ய பணித்தது. ஆயினும் மழை காரணமாக பிட்ச் சேதமடைந்ததால் ஆட்டம் கைவிடப்பட்டது. இதனால் மைதானத்தில் குவிந்திருந்த லட்சக்கணக்கான ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
கேப்டன் விராட் கோலி விளக்கம்
டாஸ் வென்ற விராட் கோலி பௌலிங்கை தேர்ந்தெடுத்தார். கவுஹாத்தியின் பாரஸ்போரா மைதானத்தில் இரண்டாவதாக ஆடும் அணியினருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்றும் அவர் விளக்கம் அளித்தார்.
டி20 போட்டிகளில் கவனம்
கடந்த ஆண்டில் டெஸ்ட் போட்டிகளிலும் சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும் இந்தியா சிறப்பாக விளையாடியதாக பெருமிதம் தெரிவித்த விராட் கோலி, வரும் அக்டோபர் மாதத்தில் டி20 உலக கோப்பை நடைபெறவுள்ளதையொட்டி, டி20 போட்டிகளில் தீவிர கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.
வந்தே மாதரம் பாடல் பாடி அசத்தல்
கவுஹாத்தியில் நடைபெறவிருந்த சர்வதேச டி20 போட்டிகள் மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில், மைதானத்தில் காத்திருந்த ஏராளமான கவுஹாத்தி ரசிகர்கள், தங்களது கைகளில் வைத்திருந்த செல்போன்களின் விளக்குகளை எரியவிட்டு, அதனிடையே, கூட்டாக வந்தே மாதரம் பாடல் பாடி அசத்தினர்.
|
டிவிட்டர் தளத்தில் வீடியோ
ரசிகர்களின் இந்த ஒற்றுமையை பாராட்டிய பிசிசிஐ, இந்த நிகழ்வை வீடியோவாக பதிவு செய்து, தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டது. மேலும் அழகான கவுஹாத்தி என்றும் கேப்ஷன் வெளியிட்டது.
இந்தூரில் நாளை நடைபெறுகிறது
இதனிடையே இந்தியா மற்றும் இலங்கை இடையிலான 2வது சர்வதேச டி20 போட்டிகள் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நாளை நடைபெறவுள்ளது. இதையடுத்து இரண்டு அணிகளும் இந்தூருக்கு சென்றுள்ளன.