இந்திய வீரர்களின் கூட்டுமுயற்சி
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 3வது டெஸ்ட் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடந்து முடிந்துள்ளது. இந்த போட்டியை இரு அணிகளும் டிரா செய்துள்ளன. கடந்த 5வது நாள் ஆட்டத்தில் ரிஷப் பந்த், புஜாரா, அஸ்வின் மற்றும் ஹனுமா விஹாரி ஆகியோரின் கூட்டு முயற்சியால் இந்த போட்டி டிரா ஆனது.
97 ரன்கள் அடித்த பந்த்
போட்டியில் காயத்தால் அவதியுற்ற போதிலும் ரிஷப் பந்த், ஹனுமா விஹாரி மற்றும் அஸ்வின் ஆகியோர் சிறப்பான பங்களிப்பை அளித்திருந்தனர். குறிப்பாக ரிஷப் பந்த் தன்னுடைய காயத்தின் இடையில் 97 ரன்களை அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
இந்தியா வெற்றி அடைந்திருக்கும்
அவர் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் 97 ரன்களில் அவுட்டாகி அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார். இந்நிலையில் அவர் இன்னும் சிறிது நேரம் மைதானத்தில் தாக்கு பிடித்திருந்தால் இந்தியா சிட்னி போட்டியில் வெற்றி கண்டிருக்கும் என்று முன்னாள் இந்திய அணியின் துவக்க வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
வெற்றிக்கு குறைவான போட்டியில்லை
அவ்வாறு நடந்திருந்தால் அது மிகச்சிறந்த வரலாற்று வெற்றியாக இருந்திருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேபோல புஜாராவின் ஆட்டத்தையும் அவர் வெகுவாக பாராட்டியுள்ளார். இந்த போட்டி டிரா ஆகியுள்ள போதிலும் இது வெற்றிக்கு சற்றும் குறைந்ததில்லை என்றும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.