12 வயசிலேயே எங்கப்பா செத்துட்டாரு.. இதை அவருக்கு சமர்ப்பிக்கிறேன்..! உருகிய இளம் இந்திய வீரர்
கிங்ஸ்டன்: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2 வது டெஸ்டில், அடித்த தமது முதல் சதத்தை தந்தைக்கு சமர்ப்பிப்பதாக விஹாரி உருக்கமுடன் தெரிவித்து இருக்கிறார்.
ரோகித் என்ற சாதனை வீரர் இருந்தாலும், அவருக்கு நஹி சொல்லி, விஹாரிக்கு யெஸ் சொல்லி இருக்கிறது இந்திய அணி நிர்வாகம். அதனால் தான், வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் 11 பேர் கொண்ட அணி வீரர்கள் பட்டியலில் இடம் பிடித்தார்.
அந்த வாய்ப்பை நழுவ விடவில்லை. சிறப்பாக ஆடி தமது திறமையை நிரூபித்து இருக்கிறார் விஹாரி. தமது இடத்தையும் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். கடந்த காலங்களிலும் இங்கிலாந்து, ஆஸி. சுற்றுப் பயணத்திலும் தனி முத்திரை பதித்தார். வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் கலக்கியிருக்கிறார்.

சதத்தால் சாதனை
முதல் போட்டியின் 2வது இன்னிங்சில் 7 ரன்களில் சதத்தை தவறவிடார். ஆனால், 2வது டெஸ்டில் அதை ஈடுகட்டிவிட்டார். முதல் இன்னிங்சில் அபாரமாக ஆடி தனது முதல் சதத்தை அடித்து சாதித்துவிட்டார்.

தந்தைக்கு அர்ப்பணிப்பு
விஹாரி, இஷாந்த் கூட்டணியால் இந்திய அணி, முதல் இன்னிங்சில் 416 ரன்களை குவித்தது. டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை அடித்த விஹாரி, தமது சதம் பற்றி பேசியிருப்பதாவது: எனது முதல் சதத்தை இறந்துபோன எனது தந்தைக்கு அர்ப்பணிப்பக்கிறேன்.

12 வயதில் மறைவு
நான் 12 வயதாக இருக்கும்போதே எனது தந்தை இறந்து விட்டார். அன்றைக்கு முடிவு செய்தேன், நான் சர்வதேச போட்டிகளில் ஆடினால், எனது முதல் சதத்தை என் தந்தைக்கு அர்ப்பணிப்பது என்று.

பெருமைப்படுவார்
இது என் வாழ்வில் மிகவும் உணர்ச்சிகரமான நெகிழ்ச்சியான தருணம். என் தந்தை எங்கிருந்தாலும் என்னை நினைத்து இப்போது பெருமைப்படுவார் என்று உருக்கமாக பேசினார்.


Click it and Unblock the Notifications