ராஜ்கோட்: விஜய் ஹசாரே தொடரின் இறுதிப்போட்டியில் வென்று முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றதன் மூலமாக ஹரியானா அணி புதிய வரலாறு படைத்துள்ளது.
நடப்பாண்டுக்கான விஜய் ஹசாரே தொடரின் இறுதிப்போட்டியில் ஹரியானா - ராஜஸ்தான் அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற ஹரியானா அணி கேப்டன் மினேரியா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து ஹரியானா அணியின் தொடக்க வீரர்களான யுவராஜ் சிங் - அன்கித் குமார் கூட்டணி களமிறங்கியது. இதில் தொடக்க வீரர் யுவராஜ் சிங் 1 ரன்னில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த ஹர்சித் ராணா 10 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

தொடர்ந்து அன்கித் குமார் - கேப்டன் மினேரியா கூட்டணி இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சிறப்பாக ஆடிய இவர்கள் இருவருமே அரைசதம் கடந்து அசத்தினார். 3வது விக்கெட்டுக்கு இவர்கள் இருவரும் சேர்ந்து 124 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்கப்பட்ட நிலையில், அன்கித் குமார் 88 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். தொடர்ந்து கேப்டன் மினேரியா 70 ரன்களில் ஆட்டமிழக்க, ஹரியானா அணி 37 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்கள் சேர்த்திருந்தது.
அதன்பின் வந்த வீரர்களில் நிஷாந்த் சிந்து 29 ரன்களும், ராகுல் டிவாட்டியா 24 ரன்களும், சுமித் குமார் 28 ரன்களும் சேர்த்தனர். இறுதியாக்a 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 287 ரன்கள் சேர்த்தது. ராஜஸ்தான் அணி தரப்பில் சவுத்ரி 4 விக்கெட்டுகளையும், அராஃபத் கான் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன்பின் 288 ரன்கள் இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி தரப்பில் அபிஜித் தோமர் - ராம் மோகன் கூட்டணி களமிறங்கியது.
இதில் தொடக்க வீரர் ராம் மோகன் 1 ரன்னிலும், லோம்ரோர் 2 ரன்களிலும், கேப்டன் தீபக் ஹூடா டக் அவுட்டாகியும் வெளியேறினர். இதனால் ராஜஸ்தான் அணி 12 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடர்ந்து வந்த கரண் லம்பாவும் 20 ரன்களில் ஆட்டமிழக்க, அபிஜித் தோமர் - குணால் சிங் ரத்தோர் கூட்டணி இணைந்து வெற்றிக்காக போராடியது. இவர்கள் இருவரும் சேர்ந்து 5வது விக்கெட்டுக்கு 121 ரன்களை சேர்த்த நிலையில், சதம் விளாசிய அசத்தலாக ஆடி வந்த அபிஜித் தோமர் 106 ரன்களில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து குணால் சிங்கும் 79 ரன்களில் ஆட்டமிழக்க, 237 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன்பின் ஹரியானா பவுலர்களின் வேகத்தில் அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியாக ராஜஸ்தான் அணி 48 ஓவர்களில் 257 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. இதன் மூலமாக விஜய் ஹசாரே தொடரின் இறுதிப்போட்டியில் ஹரியானா அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்று, முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று புதிய வரலாற்றை உருவாக்கியுள்ளது.