
பாகிஸ்தான் அணி
இந்திய அணி சூப்பர் 12 சுற்றில் தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொண்டது. முதலில் பேட் செய்த இந்திய அணியில் விராட் கோலி, பந்த் தவிர வெறு யாரும் சிறப்பான ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து தடுமாறிய இந்தியாவால் வெறும் 151 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. அடுத்துக் களமிறங்கிய பாகிஸ்தான் விக்கெட் இழப்பின்றி 152 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. உலகக் கோப்பை தொடர் ஒன்றில் பாகிஸ்தானிடம் இந்தியா தோற்பது இதுவே முதல் முறையாகும்.

படுதோல்வி
முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் வீழ்ந்த இந்தியா, அடுத்த போட்டியில் நியூசிலாந்திடம் மரண அடி வாங்கியது. அதில் இந்திய அணியில் அதிகபட்சமாக ஜடேஜா மட்டும் 26 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து அணியின் அட்டகாசமான பவுலிங்க் காரணமாக 7ஆவது ஓவரில் தொடங்கி 16ஆவது ஓவர் வரை இந்தியா ஒரு பவுண்டரி கூட அடிக்க முடியவில்லை. 20 ஓவர் முடிவில் வெறும் 110 ரன்களை மட்டுமே இந்தியா எடுத்தது. அடுத்துக் களமிறங்கிய நியூசிலாந்து அணியும் இந்திய பவுலிங்கை புரட்டி எடுத்து, வெறும் 15 ஓவர்களில் வெற்றி பெற்றது.

அடுத்தடுத்து வெற்றி
அடுத்து வரும் அனைத்து போட்டிகளிலும் வென்றால் மட்டுமே அடுத்த சுற்றைப் பற்றி நினைத்துக் கூட பார்க்க முடியும் என்ப நிலையில், கடந்த 3ஆம் தேதி ஆப்கனுக்கு எதிரான போட்டியில் இந்தியா 210 ரன்களை குவித்தது. அடுத்து வந்த ஆப்கன் 144 ரன்களை மட்டுமே எடுக்க இந்தியா 66 ரன்களை எடுத்தது. அதைத்தொடர்ந்து நேற்று நடைபெற்ற போட்டியில் ஸ்காட்லாந்து அணியை வெறும் 85 ரன்களுக்கு சுருட்டியது இந்தியா. ஷமி, மற்றும் ஜடேஜா அட்டகாசமாகப் பந்துவீசி 3 விக்கெட்களை வீழ்த்தினர்.

இந்தியா அணி
அடுத்த களமிறங்கிய இந்தியத் தொடக்க வீரர்கள் தாண்டவம் ஆடினர். ஸ்காட்லாந்து பந்துவீச்சைத் துவைத்து எடுத்து இந்தியா வெறும் 6.3ஓவர்களில், அதாவது 39 பந்துகளில் இலக்கை எட்டி சாதனை படைத்தது. குறிப்பாக, ராகுல் வெறும் 19 ரன்களில் அரைசதம் அடித்தார். இதனால் இந்திய அணியில் ரன் ரேட்டும் வேற லெவலுக்கு சென்றுவிட்டது. அதேநேரம் இந்தியாவின் இந்த அட்டகாசமான வெற்றி இணையத்தில் பல ஊகங்களுக்கும் வழி வகுத்தது.

ஸ்போர்ட்ஸ் பிக்கிசங்
டி20 உலகக் கோப்பையில் பிசிசிஐ ஸ்போர்ட்ஸ் பிக்கிசங்கில் ஈடுபட்டுள்ளதாகவும் அதனால் தான் இந்தியா அடுத்தடுத்து போட்டிகளில் வெல்வதாகவும் இணையத்தில் டிரெண்டிங் செய்யப்பட்டது. குறிப்பாக, பாகிஸ்தான் ரசிகர்கள், இந்தியாவின் வெற்றிக்கு ஒரே காரணம் பிசிசிஐ-இன் ஸ்போர்ட்ஸ் பிக்கிசங் தான் எனக் கூறி பல ஹேஷ்டேக்குகளை டிரெண்ட் செய்தனர். இந்நிலையில், அவர்கள் அனைவருக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் ஹர்பஜன் சிங் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஹர்பஜன் சிங்
இது குறித்து ஹர்பஜன் தனது யூடியூப் சேனலில் பேசுகையில், "பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தனது நான்கு ஆட்டங்களிலும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறிய முதல் அணியாக உருவெடுத்துள்ளது. அவர்கள் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதற்காக அவர்களை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இந்தியாவுக்கு எதிரான போட்டியிலும் கூட பாகிஸ்தான், சிறப்பான ஒரு ஆட்டத்தையே வெளிப்படுத்தி இருந்தது.

உங்கள் லட்சணம் தெரியும்
ஆனால் இதற்காக நீங்கள் மற்றவர்களைக் குற்றஞ்சாட்டக்கூடாது. நீங்கள் வென்றால், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வென்றோம் என்கிறீர்கள். நாங்கள் வென்றால் போட்டியின் மீதே சந்தேகத்தைக் கிளப்புகிறார்கள். ஆனால், ஒன்றை மறந்துவிடாதீர்கள், ஒட்டுமொத்த உலகத்திற்கே உங்கள் லட்சணம் தெரியும். உலகக் கோப்பையில் இந்தியாவை வென்றதைப் பாகிஸ்தான் ரசிகர்களாலேயே நம்ப முடியவில்லை. அதனால் தான் இப்படி ஆதாரமற்று பேசி வருகின்றனர். ரஷித் கான் மீதும் எங்கள் வீரர்கள் மீதும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அள்ளி வீசி வருகின்றனர், இது மிகவும் மலிவானது மற்றும் அவமானகரமானது" என்று குறிப்பிட்டார்.


Click it and Unblock the Notifications