மும்பை : 2024 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி விளையாட உள்ளது. ஆனால், இந்திய அணியில் முக்கியமான இருவரின் உறவு குறித்த சந்தேகம் அனைவருக்குமே உள்ளது.
அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கும், துணை கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கும் இடையே ஐபிஎல் தொடரில் விரிசல் எழுந்ததாக செய்திகள் வெளியாகின. அது டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக விளையாடும் போது பாதிப்பை ஏற்படுத்துமா? அவர்கள் இருவரும் ஐபிஎல் தொடரில் ஏற்பட்ட கசப்பான சம்பவங்களை மறந்து விட்டு ஒரே அணியாக ஒரே இந்திய அணியாக விளையாடுவார்களா? என்ற சந்தேகம் அனைவருக்கும் உள்ளது.

இந்த நிலையில் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங், இந்திய அணி நிர்வாகத்தை எச்சரித்து இருக்கிறார். 2021 ஐபிஎல் தொடருக்கு முன் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக பத்து ஆண்டுகள் சிறப்பாக செயல்பட்டு வந்த ரோஹித் சர்மாவை அந்த அணி நீக்கியது. அவருக்கு பதிலாக குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து வரவழைக்கப்பட்ட ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதனால், ரோஹித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா இடையே விரிசில் எழுந்ததாக தகவல் பரவியது. மேலும் ஹர்திக் பாண்டியாவின் ஃபார்ம் மிக மோசமாக சரிந்தது.
இது குறித்து ஹர்பஜன் சிங் பேசுகையில், "மும்பை இந்தியன்ஸ் அணி ஒரே அணியாக விளையாடவில்லை. அங்கே நிறைய பிரச்சனைகள் நடந்தேறின. கடந்த இரண்டு மாதங்களாக ஹர்திக் பாண்டியா சுதந்திரமான மனிதராக இருக்கவில்லை. ரோஹித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா மட்டுமின்றி பல்வேறு ஐபிஎல் அணிகளில் ஆடிய மற்ற இந்திய வீரர்களும் ஒன்றாக இணைய வேண்டும். அணிக்காக சிறப்பான ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என அவர்கள் நினைக்க வேண்டும்." என்றார்.
மேலும், "ஒரு ஐபிஎல் கோப்பையை வெல்வதை விட உலகக் கோப்பையை வெல்வது மிகப்பெரிய சாதனையாகும். எனவே நான் அணி நிர்வாகத்துக்கு ஒரே ஒரு வேண்டுகோளை வைக்கிறேன். அனைவரையும் ஒன்றாக இணையுங்கள். அனைத்து வீரர்களையும் ஒரே அணியாக விளையாட வையுங்கள். அனைவரையும் ஒருங்கிணைக்கும் பணி இந்திய அணி நிர்வாகத்துடையது தான் என்று நான் நம்புகிறேன். அனைவரும் ஒன்றாக இணைந்து வெற்றி பெறுங்கள். இல்லையெனில் தோல்வியடைந்தாலும் ஒன்றாகவே தோல்வியடையுங்கள்" இவ்வாறு ஹர்பஜன் சிங் கூறினார்.