மும்பை : உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் அதிரடி வீரர் சூரியகுமார் யாதவும் கண்டிப்பாக இடம் பெற வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக பேசிய அவர் சூரியகுமார் யாதவ் ஒரு முழுமையான வீரர் என்று பாராட்டியுள்ளார்.
சஞ்சு சாம்சன் தொடர்பாக தேர்வு குழுவினர் எந்த ஒரு கடினமான முடிவையும் எடுக்கவில்லை என்று குறிப்பிட்ட ஹர்பஜன், சஞ்சு சாம்சன் மிகச்சிறந்த வீரர் திறமையான பேட்ஸ்மேன் என்பதை ஒப்புக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

எனினும் உங்களால் 15 வீரர்களை மட்டும் தான் தேர்வு செய்ய முடியும் என்று சுட்டிக் காட்டிய ஹர்பஜன்சிங் சஞ்சு சாம்சனுக்கு பதில் சூரிய குமாரை எடுத்ததுதான் சரியான முடிவு என்றும் அவர் கூறியுள்ளார். நடு ஓவரில் சூரியகுமார் போல் யாராலும் விளையாட முடியாது என்று குறிப்பிட்டுள்ள ஹர்பஜன்சிங் முதல் பந்தலில் இருந்தே அவரால் பெரிய ஷாட்கள் ஆடி ரன்கள் அடிக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.
சஞ்சு சாம்சனும் அதிரடியாக விளையாடுகிறேன் என முதல் பந்தில் இருந்து அடித்தால் அவர் ஆட்டமிழக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. ஆனால் சூரியகுமார் யாதவும் டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடியிருக்கிறார். இதனால் அவர் ரன் சேர்க்க வாய்ப்பு இருக்கிறது என்றும் ஹர்பஜன்சிங் விளக்கம் அளித்துள்ளார். பலரும் டி20 கிரிக்கெட்டில் அவர் செய்வதை ஏன் ஒரு நாள் கிரிக்கெட்டில் செய்ய தவறிவிட்டார் என்று கேட்கிறார்கள் என்று குறிப்பிட்ட ஹர்பஜன்சிங், இதற்கு பேட்டிங் வரிசை தான் காரணம் என்று விளக்கம் அளித்துள்ளார்.
சூரியகுமார் யாதவ்க்கு ஐந்து அல்லது ஆறாவது இடத்தில் தான் பேட்டிங் செய்ய வாய்ப்பு வழங்க வேண்டும் என்று சுட்டிக் காட்டிய ஹர்பஜன்சிங், இது கடினமான வேலை என்றும் தோனி,யுவராஜ் சிங் போன்ற வீரர்கள் தான் இதனை சிறப்பாக செய்ததாகவும் அதனை சூரிய குமார் யாதவ் மேற்கொள்வார் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாகவும் கூறியுள்ளார்.
சூரியகுமார் யாதவும் நடு வரிசையில் மேற்கொள்ளும் பணியை விராட் கோலி ரோகித் சர்மாவோ சஞ்சு சம்சனாலோ செய்ய முடியாது என்றும் ஹர்பஜன் சுட்டிக்காட்டி உள்ளார்.
சூரிய குமார் யாதவ் கீழ் வரிசையில் பேட்டிங் செய்தால் அவரால் 20 பந்துகளில் 50 முதல் 60 ரன்கள் எடுக்க முடியும் என்று குறிப்பிட்ட ஹர்பஜன்சிங், அவர் ரன் அடிக்கிறாரோ இல்லையோ அவர் களத்தில் நிற்கும்போது நிச்சயம் எதிரணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளார். சூரியகுமார் யாதவை வெளியே அமர வைப்பது அவருடைய திறமையை வீணடிப்பது ஆகும் என்றும் ஹர்பஜன் கூறியுள்ளார்.