"கம்பீர் பேசும் கசப்பான உண்மைகளை..".. விமர்சகர்களுக்கு முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் பதிலடி
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் சமீப காலமாக கடும் விமர்சனங்களைச் சந்தித்து வருகிறார். குறிப்பாக, டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் சரிவுக்கு கம்பீரின் அணுகுமுறையே காரணம் என விமர்சகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், கம்பீருக்கு ஆதரவாக இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் குரல் கொடுத்துள்ளார்.
கம்பீர் குறித்துப் பேசிய ஹர்பஜன் சிங், "கம்பீர் மிகவும் நேர்மையானவர், எதையும் வெளிப்படையாகப் பேசக் கூடியவர். பலருக்கு அவரது பேச்சுகள் கசப்பாகத் தோன்றலாம், ஆனால் அவர் பேசுவது கசப்பான உண்மை. இன்றைய காலத்தில் பலரால் உண்மையை ஜீரணிக்க முடிவதில்லை. அவர் பேசும் விதம் வேண்டுமானால் அவர் ஒரு கடினமான நபர் என்ற எண்ணத்தை ஏற்படுத்தலாம். ஆனால், அவர் ஒரு சிறந்த மனிதர். கிரிக்கெட் விளையாட்டை எப்படி விளையாட வேண்டும் என்ற தெளிவான புரிதல் அவரிடம் உள்ளது" என்று கூறியுள்ளார்.

கம்பீரின் பயிற்சியின் கீழ் இந்திய அணி 2026 டி20 உலகக்கோப்பை, 2025 சாம்பியன்ஸ் டிராபி மற்றும் 2026 ஆசிய கோப்பை என 3 முக்கிய கோப்பைகளை வென்றுள்ளது. எனினும், ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்ததுடன், சொந்த மண்ணில் நியூசிலாந்து, தென்னாப்பிரிக்காவிடம் 0-3 என்ற கணக்கில் டெஸ்ட் தொடர்களை இழந்தது பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. இது குறித்துப் பேசிய ஹர்பஜன், "அணி சிறப்பாக விளையாடாத போதெல்லாம் பயிற்சியாளரைக் குறை கூறுவது ஏன் என்று எனக்குப் புரியவில்லை" என ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
மேலும், கம்பீரின் ஆட்ட அணுகுமுறை குறித்துப் பேசிய அவர், "கம்பீர் எப்போதுமே 'வெற்றிக்காக விளையாடு' என்ற ஒரே கொள்கையைத் தான் அணிக்குக் கொண்டு வர விரும்புவார். வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் போராடி தோற்றால் கூட அவர் கவலைப்பட மாட்டார். ஆனால், வெற்றிக்காக முயலாமல் ஆட்டத்தைச் சமன் செய்வதை அவர் ஒருபோதும் விரும்ப மாட்டார்" என்று கூறினார். ஆரம்பக் காலங்களில் கம்பீர் மிகவும் அமைதியானவர் என்றும், வீரேந்தர் சேவாக், அமித் மிஷ்ரா, முனாஃப் படேல் ஆகியோருடன் மட்டுமே நெருக்கமாகப் பழகுவார் என்றும் ஹர்பஜன் நினைவுகூர்ந்தார்.


Click it and Unblock the Notifications
