
கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு டிசம்பர் அல்லது நவம்பர் மாதம் முதல் உலகில் பரவத் துவங்கி இருக்கலாம் என கருதப்படுகிறது. சீனாவில் தான் முதன் முதலில் இந்த வைரஸ் அதிக அளவில் பரவத் துவங்கியது. தொடர்ந்து உலகம் முழுவதும் பரவி வருகிறது.

சரிந்த பொருளாதாரம்
உலகம் முழுவதும் பொருளாதாரம் கடுமையாக சரிந்துள்ளது. மக்கள் பலர் வேலை இழந்துள்ளனர். பலருக்கு சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது. உற்பத்தி, ஏற்றுமதி ஆகியவையும் பாதிக்கப்பட்டுள்ளது. உலகம் மோசமான பொருளாதார தேக்க நிலையை சந்தித்துள்ளது.

இந்தியா - சீனா பதற்ற நிலை
இதற்கிடையே, இந்தியா - சீனா எல்லையில் பதற்ற நிலை உருவாகி உள்ளது. கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனா மீது விசாரணை கோரிய தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது முதல் எல்லையில் பதற்ற நிலை ஏற்பட்டு உள்ளது. இருதரப்பும் இராணுவத்தை எல்லையில் குவித்து வருவதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளது.

சீனாவில் பாதிப்பு குறைவு
கொரோனா வைரஸ் இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில், சீனாவில் பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. மிகச் சிறிய அளவிலேயே அங்கே தினசரி பாதிப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சீனாவில் பொருளாதாரம் முன்னேறி வருவதாக சீனாவே கூறி வருகிறது.

ஹர்பஜன் கோபம்
இந்த நிலையில், மே 28 அன்று சீனாவில் ஒருவர் கூட கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகவில்லை என வெளியான செய்தி ஒன்றின் கீழ் கோபமாக பதிவிட்டுள்ளார் ஹர்பஜன் சிங். சீனா தான் கொரோனா வைரஸை பரப்பி விட்டதாக கூறி உள்ள அவர், மற்றவர்கள் சிக்கித் தவிக்கும் போது வேடிக்கை பார்ப்பதாக கூறி உள்ளார்.

அதிகாரப் பசி
மேலும், பாதுகாப்பு கவசங்கள், முகக் கவசம் ஆகியவற்றை உற்பத்தி செய்து அவர்களது பொருளாதாரத்தை சக்தி வாய்ந்ததாக மாற்றிக் கொள்வதாகவும் சரமாரி குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். அதிகாரப் பசியில் சீனா இருப்பதாகவும் கூறி உள்ளார்.

உண்மை என்ன?
ஹர்பஜன் சிங் பகிர்ந்த செய்தி உண்மை அல்ல என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. மே 28 அன்று ஐந்து பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு முந்தைய தினம் 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியானது. அப்படி இருந்தாலும் மற்ற நாடுகளை விட சீனாவில் பாதிப்பு குறைவாகவே உள்ளது.


Click it and Unblock the Notifications











