மும்பை: 2024 டி20 உலகக் கோப்பை வென்ற அணியில் அதிக நட்சத்திர வீரர்கள் இருந்தனர். ஆனால், 2007 டி20 உலகக் கோப்பையில் புதிய வீரர்களை கொண்டு, டி20 போட்டிகள் குறித்து எதுவும் தெரியாமல் நாங்கள் கோப்பை வென்றோம் என ஹர்பஜன் சிங் இரண்டு உலகக் கோப்பைகளையும் ஒப்பிட்டு பேசி இருக்கிறார்.
2024 டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி, பும்ரா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ் என அனுபவ வீரர்கள் பலர் இருந்தனர். இவர்களைத் தவிர அர்ஷ்தீப் சிங், சிவம் துபே என ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு இருந்த வீரர்களும் அணியில் இடம் பெற்று இருந்தனர்.

ஒட்டுமொத்த வீரர்களின் சிறப்பான செயல்பாட்டால் இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்றது. ஆனால், 2007 டி20 உலகக் கோப்பை இதற்கு முற்றிலும் நேர்மாறானது. அப்போதுதான் டி20 போட்டிகள் அறிமுகமாகி இருந்தன. பல அணிகளும் டி20 போட்டிகளில் விளையாட ஆர்வம் காட்டவில்லை. இந்திய அணியும் அதில் ஒன்று.
டி20 போட்டிகளை பிரபலப்படுத்த வேண்டி டி20 உலகக் கோப்பை தொடர் நடத்தப்பட்டது. 2007 ஆம் ஆண்டு நடந்த அந்த முதல் உலகக் கோப்பை தொடரில் தோனி தலைமையில் அதிக இளம் வீரர்கள் கொண்ட இந்திய அணி அனுப்பப்பட்டது. அந்த அணியில் வீரேந்தர் சேவாக், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் மற்றும் அஜித் அகர்கர் என மிகச் சில அனுபவ வீரர்களே இருந்தனர். மற்ற வீரர்கள் அதிக கிரிக்கெட் அனுபவம் இன்றி விளையாடினர்.
அது மட்டும் இன்றி அப்போது விளையாடிய எந்த இந்திய வீரருக்கும் டி20 போட்டிகளை எப்படி ஆட வேண்டும் என்ற தெளிவான திட்டம் இல்லை. எனினும், இந்திய அணி சிறப்பாக விளையாடி உலகக் கோப்பையை வென்றது. இது குறித்து ஹர்பஜன் சிங் ஒரு பேட்டியில் விரிவாக பேசியிருக்கிறார்.
ஹர்பஜன் சிங் பேசுகையில், "2007 டி20 உலகக் கோப்பை வென்ற எங்கள் அணியை விட 2024 டி20 உலகக் கோப்பை வென்ற அணியில் அதிக மேட்ச் வின்னர்கள் இருந்தார்கள். அப்போது டி20 போட்டிகள் என்பது எங்களுக்கு புதிதாக இருந்தது. நாங்கள் அப்போதுதான் முதல்முறையாக அதில் ஆடினோம். டி20 கிரிக்கெட் என்றால் என்ன என்று எங்களுக்கு எதுவும் தெரியவில்லை. போட்டியின் ஓட்டத்திற்கு ஏற்ப சென்று நாங்கள் வெற்றி பெற்றோம்." என்றார்.
மேலும், "2007 இல் எங்கள் அணியில் பெரிய வீரர்கள் யாரும் இல்லை. யுவராஜ் சிங், சேவாக், நான் மற்றும் அஜித் அகர்கர் ஆகியோர் மட்டுமே அனுபவ வீரர்களாக இருந்தோம். பெரும்பாலான வீரர்கள் இந்திய அணிக்கு புதிதாக இருந்தார்கள். தோனி முதல் முறையாக கேப்டனாக செயல்பட்டார். ஆனால், இப்போதைய அணியை நீங்கள் எடுத்துப் பாருங்கள். ரோஹித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா என எல்லோருமே மேட்ச் வின்னர்கள். அதன் பின், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் அக்சர் பட்டேல் ஆகியோர் இருந்தனர். அக்சர் பட்டேல் குறித்து மக்கள் அதிகம் பேசுவதில்லை. இறுதிப் போட்டியில் அவரது செயல்பாட்டை பாருங்கள். சிறப்பாக ஆடி இருந்தார். பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங் ஒட்டுமொத்த தொடரிலும் சிறப்பாக செயல்பட்டனர். அந்த அணியில் இருந்த எல்லோருமே மேட்ச் வின்னர்கள். அவர்கள் சிறப்பாக கிரிக்கெட் ஆடி வெற்றி பெற்றார்கள்." என்றார் ஹர்பஜன் சிங்.