முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தோனியை பாகுபலியுடன் ஒப்பிட்டு பேசி இருக்கிறார். தோனி தான் பாகுபலி என்றும், அவர் தொட்டதெல்லாம் தங்கமாக மாறுகிறது என்றும் கூறி இருக்கிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2025 ஐபிஎல் தொடரில் தனது ஆறாவது போட்டியில் இருந்து தோனியின் தலைமையில் விளையாடி வருகிறது.
தோனியின் கேப்டன்சியில் முதல் போட்டியில் தோல்வி அடைந்த சிஎஸ்கே அணி அடுத்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக அபாரமான வெற்றியை பதிவு செய்தது. அந்த போட்டியில் ஏழாம் வரிசையில் இறங்கிய தோனி 11 பந்துகளில் 26 ரன்கள் விளாசினார். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 166 ரன்கள் சேர்த்திருந்தது.

167 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடியபோது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சற்று நிதானமாக ஆடி வந்த நிலையில், தோனி ஏழாம் வரிசையில் இறங்கி அதிரடி ஆட்டம் ஆடி சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். அந்த போட்டியில் தோனி ஆடியதை பார்த்து ஹர்பஜன் சிங் அவரை பாராட்டி பேசி இருக்கிறார்.
"தோனி தான் பாகுபலி. ஒரு கேப்டன் பேட்டிங் ஆர்டரில் சற்று முன்பே வந்தால் என்ன செய்ய முடியும் என்பதை உலகுக்கு செய்து காட்டி இருக்கிறார். ஒன்பதாம் வரிசை அவருக்கு ஏற்றது அல்ல. அவர் இந்த போட்டியில் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்தார். சிவம் துபே அவருக்கு உதவி செய்தார்."
"தோனி தொட்டதையெல்லாம் தங்கமாக மாற்றுகிறார். அவர் மீண்டும் காலத்தை பின்னோக்கி நகர்த்தி சென்று இருக்கிறார். அவர் கேப்டனாக நியமிக்கப்பட்டார், அத்துடன் எல்லாமே மாறிவிட்டது. அவர் வேறு மாதிரியாக பேட்டிங் செய்கிறார். அவருக்கு கீழ் சிஎஸ்கே அணி வேறு மாதிரியாக செயல்படுகிறது. பௌலிங் மாற்றங்கள் அபாரமாக இருந்தது. அவர் சரியான நேரத்தில் வந்தார், ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிட்டார். அப்துல் சமத்தின் ரன் அவுட் அவரின் அதிர்ஷ்டம். தோனி அங்கிருந்தால் எதுவுமே சாத்தியம் தான்" என்றார் ஹர்பஜன் சிங்.