அபுதாபி: அபுதாபியில் நடைபெற்ற டி10 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் வீரர்களுடன் ஹர்பஜன் சிங் கை குலுக்கி பேசிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இரு நாட்டுக்கும் இடையிலான பிரச்சனை மேலும் அதிகரித்து இருக்கிறது.
இதன் காரணமாக பாகிஸ்தான் மீது இந்தியா ராணுவ நடவடிக்கையை எடுத்தது. இதற்கு பாகிஸ்தானும் எல்லையோர மக்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் பலர் உயிரிழந்தனர். இதனை கண்டித்து இரு நாட்டுக்கும் இடையிலான இருத்தரப்பு கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.

அதன் பின் ஆசிய கோப்பை மற்றும் ஐசிசி தொடர்களில் மட்டும் மோத முடிவு எடுக்கப்பட்டது. இந்த தருணத்தில் பாகிஸ்தான் வீரர்களுடன் கைக்குலுக்குவது இல்லை என்றும், பாகிஸ்தான் நிர்வாகிகளை புறக்கணிப்பதும் என்றும் பிசிசிஐ முடிவெடுத்தது. அதன்படி ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய வீரர்கள் கை குலுக்காமல் சென்றனர்.
மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரும் அந்நாட்டின் அமைச்சருமான மோஷின் நக்வியிடம் கோப்பையை வாங்க இந்தியா மறுத்துவிட்டது. இது பெரும் விவாதத்தை சர்வதேச கிரிக்கெட்டில் ஏற்படுத்தியது. இந்த நிலையில் அபுதாபியில் நடைபெற்று வரும் டி10 தொடரில் ஹர்பஜன் விளையாடிய ஆஸ்பின் ஸ்டோலன் அணி நார்த்தர்ன் வாரியர்ஸ் அணியுடன் மோதி நான்கு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
அப்போது போட்டி முடிவடைந்த உடன் பாகிஸ்தான் வீரரான ஷானாவாஸ் தஹானியுடன் ஹர்பஜன் கை குலுக்கி பேசினார். இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதே ஹர்பஜன்சிங் தான் உலக சாம்பியன்ஷிப் லெஜெண்ட்ஸ் தொடரில் பாகிஸ்தானுடன் விளையாட மாட்டோம் என்ற முடிவை எடுத்தார்.
அதை தொடர்ந்து தான் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஆசிய கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் வீரர்களை இந்திய அணி புறக்கணித்து கை குலுக்காமல் சென்றது. தற்போது இந்த பிரச்சனையை தொடங்கி வைத்த ஹர்பஜன் சிங் பாகிஸ்தான் வீரர்களை கை குலுக்கி பாராட்டியதுதான் சர்ச்சை ஏற்படுத்தியிருக்கிறது பலரும் ஹர்பஜன்சிங் இந்த செயலை சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.