டெல்லி: கேல் ரத்னா விருதுக்கு ஸ்டார் பவுலர் ஹர்பஜன் சிங் பெயரை தாமதமாக பரிந்துரைத்தது ஏன் என பஞ்சாப் அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் ஹர்பஜன் சிங். சர்வ தேச போட்டிக்கான அணியில் வாய்ப்பு இல்லாததால் உள்ளூர் போட்டிகளில் கலக்கி வருகிறார்.

பஞ்சாப்பை சேர்ந்த அவருக்கு கேல் ரத்னா விருது வழங்க வேண்டும் என்று விளையாட்டுத் துறை அமைச்சகத்திற்கு அம்மாநிலம் பரிந்துரைத்தது. அதே போல் ஒடிசா தடகள வீராங்கனையான டுட்டீ சந்தின் பெயர் அம்மாநில சார்பில் அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
இந்நிலையில் இருவரின் பெயர்களையும் விளையாட்டுதுறை அமைச்சகம் நிராகரித்தது. காலக்கெடு முடிந்த பின்னர் பரிந்துரைக்கப்பட்டதால் நிராகரிக்கப்பட்டதாக விளக்கம் தரப்பட்டது. ஏப்ரல் 30ம் தேதியுடன் பரிந்துரைக்கான கெடு முடிந்த நிலையில் பஞ்சாப் அரசு 2 மாதம் கழித்து பரிந்துரை செய்துள்ளது.
கேல் ரத்னா விருதுக்கு தேவையான ஆவணங்களை ஹர்பஜன் சிங் குறித்த காலத்துக்கு முன்னரே சமர்ப்பித்து விட்டார். ஆனாலும் பஞ்சாப் மாநில விளையாட்டு துறை தாமதமாக மத்திய அரசுக்கு ஆவணங்களை அனுப்பியது. அதன் காரணமாக, ஹர்பஜன் பெயர் கேல் ரத்னா விருதுக்கு நிராகரிக்கப்பட்டது.
ஹர்பஜன் சிங் மார்ச் 20ம் தேதியே கேல் ரத்னா விருது பரிந்துரைகளுக்கு தேவையான ஆவணங்களை சமர்ப்பித்ததாக தெரிவித்துள்ளார். இத்தகைய சூழ்நிலையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.