மும்பை: வரவிருக்கும் டி20 உலகக் கோப்பைக்காக அகர்கர் குழு தேர்வு செய்த அணிக்கு முழு மதிப்பெண்களை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், வழங்கியுள்ளார். ஷுப்மன் கில் விலக்கப்பட்டது வருத்தமளித்தாலும், அவருக்கு விரைவில் மேலும் வாய்ப்புகள் கிடைக்கும் என ஹர்பஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அகர்கரின் தேர்வுக் குழு, ஷுப்மன் கில் மற்றும் ஜிதேஷ் ஷர்மா போன்றோரைத் தவிர்த்து 15 பேர் கொண்ட அணியை அறிவித்தது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அதே அணி, நியூசிலாந்துடன் ஐந்து டி20ஐ தொடரில் விளையாடும். உள்நாட்டுப் போட்டிகளில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய இஷான் கிஷன், ரிங்கு சிங் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டது, முக்கியக் கவனத்தைப் பெற்றது.

இது குறித்து பேசிய ஹர்பஜன், "அணி நிஜமாகவே அருமை. அகர்கர் தேர்வு செய்த அணிக்கு 10-க்கு 10 மதிப்பெண்கள் கொடுக்க வேண்டும் என நான் முன்னர் கூறியிருந்தேன். ஷுப்மன் கில்லுக்காக கொஞ்சம் வருத்தம்தான், ஆனால் அவருக்கு விரைவில் மேலும் வாய்ப்புகள் வரும். " என்றார்.
ஷுப்மன் கில் அணியில் இடம்பெறாதது குறித்து பேசிய ஹர்பஜன், "ஷுப்மன் கில் நிச்சயம் அணிக்குத் திரும்புவார். அவர் திரும்புவார் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. டி20 வடிவத்தின் காரணமாகவே ஷுப்மன் கில் தவிர்க்கப்பட்டதாக நான் நினைக்கிறேன்." என்று விளக்கமளித்தார்.
சூர்யகுமார் யாதவின் ஃபார்ம் குறித்துப் பேசிய ஹர்பஜன், "சூர்யகுமார் அண்மையில் பெரிய அளவில் ரன்கள் எடுக்கவில்லை. ஆனால் உலகக் கோப்பை வரும்போது முக்கிய வீரர்கள் சிறப்பாகச் செயல்பட வேண்டும். அவர் நிச்சயம் அந்தப் பெரிய போட்டிகளில் பிரகாசிப்பார். அபிஷேக் ஷர்மா ஒருவரே போட்டிகளை வெல்லக் கூடியவர்" எனத் தெரிவித்தார்.
சூர்யகுமார் யாதவ் 2025ஆம் ஆண்டில் கவலைக்கிடமான ஆட்டத்திறனை வெளிப்படுத்தினார். 19 இன்னிங்ஸ்களில் வெறும் 218 ரன்கள் சராசரி 13.62, ஸ்டிரைக் ரேட் 123.16 மட்டுமே எடுத்தார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான சொந்த மண்ணில் நடைபெற்ற தொடரில் சொதப்பியதால், அவரது வாழ்க்கையின் முக்கிய கட்டத்தில் மேலும் அழுத்தம் ஏற்பட்டது.