ஹர்பஜன் சிங் நிலை
ஹர்பஜன் சிங் 1998இல் இந்திய அணியில் அறிமுகம் ஆனார். இளம் வீரராக அப்போது தன் சுழற் பந்துவீச்சின் மூலம் அணியில் நிரந்தர இடம் பெற்றார். அடுத்த கட்ட சுழற் பந்துவீச்சாளர்களின் வரவால் கடந்த சில ஆண்டுகளில் அவர் அணியில் தன் முக்கியத்துவத்தை இழந்தார்.
அஸ்வினால் வாய்ப்பை இழந்தார்
குறிப்பாக அஸ்வின் இந்திய அணியில் முதன்மை சுழற் பந்துவீச்சாளராக மாறினார். மறுபுறம் ஜடேஜாவும் சுழற் பந்துவீச்சாளராக சிறப்பாக செயல்பட்டார். அப்போது முதல் ஹர்பஜன் சிங் இந்திய அணியில் தன் வாய்ப்பை இழந்தார்.
ஐபிஎல் செயல்பாடு
இந்திய அணியில் வாய்ப்பை இழந்தாலும் ஐபிஎல் தொடரில் ஹர்பஜன் சிங் சிறப்பாகவே செயல்பட்டு வந்தார். 2018 ஐபிஎல் முதல் ஹர்பஜன் சிங் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சுழற் பந்துவீச்சாளராக சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
வாய்ப்பு இல்லை
கடைசியாக இந்திய அணியில் 2016 ஆசிய கோப்பை டி20 தொடரில் ஆடி இருந்தார். அதன் பின் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவருக்கு 39 வயதாகும் நிலையில் இந்திய அணி தேர்வுக் குழு அவரை கண்டு கொள்ளவே இல்லை.
ஐபிஎல் பவுலிங் கஷ்டம்
இது பற்றி பேசிய ஹர்பஜன் சிங், நான் இந்திய அணியில் ஆட தயாராக இருக்கிறேன். ஐபிஎல் தொடரில் மைதானம் சிறியதாக இருக்கும் நிலையில், பந்துவீச்சாளர்களுக்கு அது கடினமாக இருக்கும். ஐபிஎல்-இல் சிறப்பாக செயல்பட்டால், சர்வதேச கிரிக்கெட்டிலும் சிறப்பாக செயல்பட முடியும். நான் பவர்பிளே மற்றும் மிடில் ஓவர்களில் தொடர்ந்து பந்துவீசி விக்கெட் வீழ்த்தி உள்ளேன் என்றார்.
கண்டுகொள்ளவில்லை
மேலும், கடந்த நான்கு, ஐந்து ஆண்டுகளாக நான் ஐபிஎல்இல் சிறப்பாக ஆடிய போதும் தேர்வுக் குழு என்னை கண்டு கொள்ளவில்லை. நான் விக்கெட் வீழ்த்தி உள்ளேன். ரெக்கார்டு எனக்கு சாதகமாக உள்ளது என்றார் ஹர்பஜன் சிங்.
என்னால் அது முடியாதா?
ஐபிஎல் அணிகள் அளவுக்கு அனைத்து சர்வதேச அணிகளும் நல்ல வீரர்களை கொண்டதாக இல்லை. ஐபிஎல்-இல் முதல் ஆறு வீரர்கள் எப்போதும் சிறப்பாக செயல்படுகிறார்கள். ஐபிஎல்-இல் ஜானி பேர்ஸ்டோ மற்றும் டேவிட் வார்னர் விக்கெட்டை வீழ்த்தும் போது என்னால் சர்வதேச போட்டிகளில் அவர்களின் விக்கெட்டை வீழ்த்த முடியாதா? என கேள்வி எழுப்பினார் ஹர்பஜன் சிங்.
யாரும் பேச மாட்டார்கள்
மேலும், ஆனால், எதுவும் என் கையில் இல்லை. இப்போது உள்ள இந்திய அணியில் யாரும் நம்மிடம் வந்து பேச மாட்டார்கள் என தற்போதைய இந்திய அணி நிர்வாகம் மற்றும் தேர்வுக் குழுவை கடுமையாக சாடினார் ஹர்பஜன் சிங்.