சஞ்சு சாம்சன் நிலை
சஞ்சு சாம்சன் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு, முன் இந்திய அணியில் ஒரே ஒரு டி20 போட்டியில் மட்டும் ஆடி இருந்தார். அதன் பின் அவருக்கு இந்திய அணியில் அழைப்பு வரவில்லை.
சிறப்பான பார்ம்
தொடர்ந்து ஐபிஎல், இந்தியா ஏ அணி மற்றும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடி வந்த சஞ்சு சாம்சன் தன் பார்மை நிரூபித்து, வங்கதேச தொடருக்கான இந்திய அணியில் பேட்ஸ்மேனாக நுழைந்தார்.
பேட்ஸ்மேன் மட்டுமே
விக்கெட் கீப்பரான அவரை பேட்ஸ்மேன் ஆக மட்டுமே அணியில் சேர்த்தது தேர்வுக் குழு. அதற்கு காரணம், தற்போது அணியின் விக்கெட் கீப்பராக இருக்கும் ரிஷப் பண்ட் தான்.
ரிஷப் பண்ட்டுக்கு முன்னுரிமை
ரிஷப் பண்ட் பேட்டிங்கில் பார்ம் அவுட் ஆக இருந்தாலும், அவருக்கு நீண்ட வாய்ப்பு அளிக்க முடிவு செய்துள்ளது தேர்வுக் குழு. அதனால், அவரை விக்கெட் கீப்பராகவும், சஞ்சு சாம்சனை பேட்ஸ்மேன் ஆகவும் அணித் தேர்வின் போது பிரித்து அறிவித்தது தேர்வுக் குழு.
வாய்ப்பு இல்லை
உத்தேச அணியில் இடம் பெற்றாலும், மூன்று டி20 போட்டிகளிலும் களமிறங்கும் வாய்ப்பு சஞ்சு சாம்சனுக்கு கிடைக்கவில்லை. அவர் "வாட்டர் பாய்" வேலை மட்டுமே பார்த்தார். இடையே இரண்டாவது போட்டிக்கு முன் தான் போட்டியில் பங்கேற்க தயாராவதாக ஒரு ட்வீட் கூட போட்டு இருந்தார். ஆனால், அவரை களமிறங்கும் 11 வீரர்களில் ஒருவராக தேர்வு செய்யவில்லை.
அணியில் நீக்கம்
இந்த நிலையில், சஞ்சு சாம்சன் வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடருக்கான அணியில் மீண்டும் தேர்வு செய்யப்படவில்லை. அவரை உத்தேச அணியில் மட்டுமே வைத்திருந்து, போட்டியில் ஆட வாய்ப்பும் அளிக்காமல், தற்போது நீக்கி இருப்பது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.
சசி தரூர் கேள்வி
கேரள வீரரான சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக அந்த மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்பி சசி தரூர் ட்விட்டரில் குரல் கொடுத்தார். அவர் கூறுகையில், மூன்று டி20 போட்டிகளிலும் அவர் தண்ணீர் சுமந்து கொண்டு சென்றார். பின்னர் நீக்கப்பட்டுள்ளார். அவரது பேட்டிங்கை சோதித்து பார்க்கிறார்களா? அல்லது இதயத்தை சோதித்து பார்க்கிறார்களா? என கேள்வி எழுப்பி இருந்தார்.
|
ஹர்பஜன் சிங் அதிரடி
அவரது கேள்விக்கு பதில் அளித்துள்ள ஹர்பஜன் சிங், அவரது இதயத்தை தான் சோதித்து பார்க்கிறார்கள் என நினைக்கிறேன். இந்த தேர்வுக் குழுவை நீக்க வேண்டும். சக்தி வாய்ந்த தேர்வுக் குழு வர வேண்டும். கங்குலி அதை செய்வார் என நம்புகிறேன் என கூறி இருக்கிறார்.
தேர்வுக் குழு மீதான விமர்சனம்
இந்திய அணியின் தற்போதைய தேர்வுக் குழு மீதான விமர்சனம் தொடர்ந்து வலுத்து வருகிறது. எம்எஸ்கே பிரசாத் தலைமையிலான இந்த தேர்வுக் குழு கேப்டன் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் சொல்படி நடப்பதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது.
கங்குலி என்ன செய்வார்?
கங்குலி இவர்களை விரைவில் மாற்றுவார் என்ற எதிர்பார்ப்பு பரவலாக உள்ளது. அதைத் தான் ஹர்பஜன் சிங் வெளிப்படுத்தி இருக்கிறார்.