மும்பை: விராட் கோலி இன்று உலகின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவராக இருக்கிறார். சச்சின் டெண்டுல்கரின் ஒரு நாள் போட்டிகளில் அதிக சதம் அடித்த சாதனையை அவர் முறியடித்து இருக்கிறார். இன்னும் பல சாதனைகளை அவர் உடைக்க இருக்கிறார். இந்த நிலையில் அவர் இந்திய அணியில் அறிமுகம் ஆன காலத்தில் ஹர்பஜன் சிங் அவரிடம் கூறிய ஒரு விஷயம் பற்றிய தகவல் இப்போது வெளியாகியுள்ளது.
அப்போது ஹர்பஜன் சிங் டெஸ்ட் போட்டிகளில் "10,000 ரன்கள் கூட அடிக்கவில்லை என்றால் அவமானமாக இருக்கும்" என்று விராட் கோலியிடம் கூறி இருக்கிறார். அன்று விராட் கோலி நம்பிக்கை இழந்த நிலையில் இருந்த போது இந்த வார்த்தைகளை கூறி அவரைப் பற்றி அவருக்கே புரிய வைத்து இருக்கிறார் ஹர்பஜன் சிங்.

இது பற்றி ஹர்பஜன் சிங் சமீபத்தில் ஒரு பேட்டியில் பகிர்ந்து கொண்டார். விராட் கோலி இலங்கை அணிக்கு எதிராக 2008 ஆம் ஆண்டு அறிமுகமானார். அந்த தொடரில் அவர் முதல் சில போட்டிகளில் 20 ரன்கள், 30 ரன்கள் என்ற அளவில் தான் ரன் எடுத்து வந்தார். அந்த ஒருநாள் தொடரின் ஐந்தாவது போட்டியில் அரைசதம் அடித்தார். அதன் பின்பு என்ன நடந்தது என ஹர்பஜன் சிங் அந்த பேட்டியில் விவரித்து இருக்கிறார்.
"எனக்கு அந்த ஒரு சம்பவம் இன்னும் நினைவில் உள்ளது. வீரேந்தர் சேவாக் காயம் அடைந்திருந்தார். அஜந்தா மெண்டிஸ் எல்லோரையும் விரைவாக வீழ்த்தி அவுட் ஆக்கி வந்தார். அப்போது விராட் கோலி பேட்டிங் செய்ய வந்தார். இளம் வீரர், முழு ஆற்றலுடன் இருந்தார். அவர் அருமையாக பேட்டிங் செய்து அரை சதம் அடித்தார். அவர் ஆட்டம் இழந்து வெளியே வந்த பின், "பாஜி நான் எப்படி ஆடினேன்?" என்று என்னிடம் கேட்டார். "மிகவும் நன்றாக ஆடினாய்." என்றேன். அடுத்து அவர், "பாஜி நான் ஆட்டம் இழந்து இருக்கக் கூடாது. மென்டிஸ்-ஐ இன்னும் அடித்து ஆடி இருக்க வேண்டும்." என்றார். அவரது இந்த ஆக்ரோஷமான குணத்தை நான் விரும்பினேன்." என்று ஹர்பஜன் சிங் கூறினார்.
அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார். அப்போது வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஃபிடல் எட்வர்ட்ஸ் இவரது விக்கெட்டை எளிதாக வீழ்த்தி வந்தார். அப்போது ஹர்பஜன் சிங் 10,000 ரன்கள் குவிக்க முடியும் என்று கோலிக்கு சுட்டி காட்டி இருந்தார்.
அது பற்றி ஹர்பஜன் சிங் பேசுகையில், "விராட் கோலியின் டெஸ்ட் கிரிக்கெட் பற்றி சொல்ல வேண்டும் என்றால் அந்த சம்பவம் அவரது துவக்க காலத்தில் நடைபெற்றது. நாங்கள் வெஸ்ட் இண்டீஸில் இருந்தோம். அந்த சுற்றுப்பயணத்தில் வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்துவீச்சாளர் ஃபிடல் எட்வர்ட்ஸ் விராட் கோலியை அச்சுறுத்தி வந்தார். அவரை எல்பிடபுள்யூ ஆகவோ அல்லது ஷார்ட் பந்துகளை வீசியோ வீழ்த்தி வந்தார். கோலி மீண்டும், மீண்டும் அவரிடம் அவுட் ஆகி கொண்டு இருந்தார்."
"அதனால், மிகுந்த ஏமாற்றத்தில் இருந்தால் கோலிக்கு தன் மீதே சந்தேகம் இருந்தது. "நான் நன்றாக ஆடுகிறேனா?" என அவர் என்னிடம் கேட்டார். நான் அவரிடம் சொன்னது இதுதான். "நீ பத்தாயிரம் ரன்கள் அடிக்கவில்லை என்றால் உனக்கே அவமானமாக இருக்கும். டெஸ்ட் கிரிக்கெட்டில் பத்தாயிரம் ரன்கள் அடிக்கும் அளவுக்கு உன்னிடம் திறமை உள்ளது. நீ அதை செய்யவில்லை என்றால் அதற்கு நீ தான் பொறுப்பு." என்றேன். அதன் பின் கோலி செய்தது வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே நமக்கு கிடைக்கக்கூடிய விதிவிலக்காக அமைந்தது." என்றார் ஹர்பஜன் சிங்.