தீவிரவாத தாக்குதல்
புல்வாமா பகுதியில் நடந்த தீவிரவாத தாக்குதலில் சுமார் 40 இந்திய வீரர்கள் மரணமடைந்தனர். இதையடுத்து தீவிரவாதத்துக்கு துணை போவதாகக் கூறி பாகிஸ்தான் நாட்டுக்கு உலகளவில் எதிர்ப்பு வலுத்து வருகிறது.
உலகக்கோப்பை ஆட்டம் வேண்டாம்
இந்தியர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். அதில் முக்கியமாக மே - ஜூன் மாதங்களில் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடக் கூடாது என கூறி வருகின்றனர்.
ஆடாம ஜெயிப்போம்
இது சாத்தியமா என்ற விவாதம் ஒரு புறம் நடந்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில், ஹர்பஜன் சிங், "இந்தியா, பாகிஸ்தான் அணிக்கு எதிராக உலகக்கோப்பையில் ஆடக் கூடாது. பாகிஸ்தான் அணியுடன் ஆடாமலேயே உலகக்கோப்பை வெல்லும் அளவுக்கு இந்தியாவுக்கு பலம் உள்ளது" என ஆஜ்-தக் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறி இருக்கிறார்.
தொடர்பு
மேலும், "இந்தியா கிரிக்கெட்டில் எந்த தொடர்பும் அவர்களோடு வைத்துக் கொள்ளக் கூடாது. அப்படி இல்லையென்றால், அவர்கள் நம்மை இப்படி தான் நடத்துவார்கள்" என தாக்குதல் சம்பவத்தை குறிப்பிட்டு காட்டமாக கூறினார் ஹர்பஜன்.
எப்போது லீக் போட்டி?
உலகக்கோப்பையில் இந்தியா ஜூன் 16 அன்று நடக்கவுள்ள லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை சந்திக்க உள்ளது. ஆனால், தற்போது வலுத்து வரும் எதிர்ப்புகளால், இந்தியா இந்த போட்டியில் பங்கேற்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
பின்னடைவு
ஒருவேளை அந்த இந்தியா லீக் போட்டியில் ஆடாவிட்டால் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றதாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இது இந்திய அணிக்கு பின்னடைவாக அமையும்.
ஹர்பஜன் சொன்ன அர்த்தம்
இதை தான் ஹர்பஜன் கூறி இருக்கிறார். பலம் வாய்ந்த இந்தியா இந்த போட்டியில் புள்ளிகளை விட்டுக் கொடுத்தாலும், லீக் சுற்றில் தகுதி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என கூறி உள்ளார்.
மாற்றம் இருக்கலாம்
எனினும், உலகக்கோப்பைக்குள் என்ன மாற்றம் வேண்டுமானாலும் நிகழலாம். காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் சம்பவம் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட்டில் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்துமா?
இம்ரான் கான்
முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டன் இம்ரான் கான் தற்போது பாகிஸ்தான் பிரதமராக இருக்கும் நிலையில், நிச்சயம் பெரிய தாக்கம் இருக்கும் என்றே தோன்றுகிறது.