மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2025 ஐபிஎல் தொடரில் மிக மோசமாக விளையாடி வரும் நிலையில், ஹர்பஜன் சிங் சிஎஸ்கே செய்த தவறு ஒன்றைச் சுட்டிக்காட்டி சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார்.
"சுரேஷ் ரெய்னா இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி இருக்க முடியும். அவரை கேப்டன் ஆக்கி இருக்க வேண்டும். ஆனால், நிர்வாகம் அவரை ஆதரிக்கவில்லை. அதனால், அவர் ஓய்வு பெற்று விட்டார்" என ஹர்பஜன் சிங் தற்போது பேசியிருக்கிறார். இது சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இதுவரை 8 போட்டிகளில் விளையாடி இரண்டு வெற்றிகளை மட்டுமே பெற்றிருக்கிறது. நேற்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 176 ரன்கள் மட்டுமே எடுத்து, பின்னர் மும்பை இந்தியன்ஸ் அணி 15.4 ஓவர்களில் எளிதாக வெல்ல அனுமதித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
இந்த மோசமான தோல்விக்குப் பிறகு ஹர்பஜன் சிங் சிஎஸ்கே குறித்துப் பேசினார். அப்போது அவர், "சுரேஷ் ரெய்னா சிஎஸ்கே அணிக்காக இன்னும் மூன்று ஆண்டுகள் விளையாடி இருக்க முடியும். ஆனால், அந்த அணி நிர்வாகம் அவரை ஆதரிக்கவில்லை. அதனால் அவர் ஓய்வு பெற்று விட்டார். சுரேஷ் ரெய்னா அந்த அணியின் கேப்டனாகி இருக்க முடியும். ஏனெனில், அவர் சிஎஸ்கே அணிக்காக 15 ஆண்டுகள் விளையாடியிருக்கிறார். அவர் அந்த அணியின் துணை கேப்டனாக இருந்தார். ஆனால், சிஎஸ்கே அணியை வழிநடத்தும் வாய்ப்பு அவருக்கு அளிக்கப்படவில்லை" என்றார்.
சுரேஷ் ரெய்னாவுக்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்திற்கும் இடையில் மனக்கசப்பு ஏற்பட்டதாகச் சில ஆண்டுகளுக்கு முன்பு செய்திகள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதன் காரணமாக, சுரேஷ் ரெய்னா ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து நீக்கப்பட இருந்ததாகவும், வேறு அணிக்கு விளையாட விரும்பாததால் தான் அவர் ஓய்வை அறிவித்ததாகவும் அப்போது பரவலாகச் செய்திகள் வெளியாகி இருந்தன.
35 வயதிலேயே சுரேஷ் ரெய்னா ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்றது அப்போது அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா போன்றோர் அதிக வயதிலும் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் நிலையில், சுரேஷ் ரெய்னாவும் விளையாடி இருக்கலாம்.
ஆனால், இப்போது சுரேஷ் ரெய்னா சிஎஸ்கே நிர்வாகத்துடன் அவ்வப்போது பேசும் காட்சிகளையும் நாம் பார்த்திருக்கிறோம். அதனால், எது உண்மை என்பது யாருக்கும் தெரியாது. எனினும், ஹர்பஜன் சிங் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடியவர் என்ற வகையில் அவரது இந்த பேச்சு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ஹர்பஜன் சிங் மேலும் சிஎஸ்கே அணியின் ப்ளே ஆஃப் வாய்ப்பு பற்றியும் தனது கருத்தைக் கூறினார். "சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாது. இந்த விளையாட்டு மாறிவிட்டது. எங்கோ முன்னேறிச் சென்றுவிட்டது" என சிஎஸ்கேவின் பழமையான திட்டங்களை விமர்சித்தார்.