கருண் நாயர் ஏன் இல்லை?
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய அணியில் கருண் நாயருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. காரணம், கடந்த ஆறு டெஸ்ட் (ஆப்கானிஸ்தான் 1 டெஸ்ட் போட்டி, இங்கிலாந்து 5 டெஸ்ட் போட்டிகள்) போட்டிகளில் கருண் நாயர் உத்தேச அணியில் இடம் பிடித்தாலும், களத்தில் இறங்கும் 11 பேர் கொண்ட அணியில் இடம் பெறவில்லை. ஒரு பார்வையாளர் போல கடந்த ஆறு டெஸ்ட் போட்டிகளில் அமர வைக்கப்பட்ட கருண் நாயருக்கு, களத்தில் தன்னை நிரூபிக்க எந்த வாய்ப்பும் வழங்காமல் இருந்து விட்டு தற்போது டெஸ்ட் அணியில் இடம் இல்லை என கூறுவது சரியா? என பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.
மர்மம் விலகுமா?
இது பற்றி பேசிய ஹர்பஜன், "இந்த மர்மம் விலக வேண்டும். கடந்த 3 மாதங்களாக சும்மா உட்கார வைக்கப்பட்ட ஒருவர் எப்படி அணியில் இடம் பிடிக்க முடியாத அளவு மோசமான வீரர் ஆனார்? தேர்வாளர்கள் என்ன அளவீடுகள் கொண்டு தேசிய அணியை தேர்வு செய்கிறார்கள் என்பது எனக்கு புரியவில்லை. இது மிக கடினமாக உள்ளது" என காட்டமாக கூறியுள்ளார்.
வீரர்களுக்கு ஏற்ப விதிகள் மாறுதே
அது போல, இந்திய அணியில் சில வீரர்களுக்கு அதிக வாய்ப்புகளும், சில வீரர்களுக்கு ஒரு வாய்ப்பில் தோல்வி அடைந்தால் கூட அடுத்த வாய்ப்பு கிடைக்காமல் போவது பற்றியும் பேசியுள்ளார் ஹர்பஜன். "நான் வீரர்களுக்கு ஏற்றார் போல விதிகள் மாறுவதை காண்கிறேன். சில வீரர்களுக்கு நீண்ட காலம் அணியில் இருந்து வெற்றிகரமாக வளர அனுமதிக்கிறார்கள். சிலருக்கு ஒரு வாய்ப்பில் கூட தோற்க அனுமதிப்பதில்லை. இது சரியானதல்ல" என சுட்டிக் காட்டியுள்ளார் ஹர்பஜன்.
கிடுக்கிப்பிடி கேள்விகள்
மேலும், "தற்போது அணியில் இருக்கும் ஹனுமா விஹாரி ஒருவேளை வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் சரியாக ஆடவில்லை என்றால் மீண்டும் கருண் நாயரை ஆஸ்திரேலியா டெஸ்டுக்கு அழைப்பீர்களா? அப்போது அவர் நம்பிக்கையுடன் இருப்பாரா?" எனவும் கிடுக்கிப்பிடி கேள்விகளால் துளைத்துள்ளார் ஹர்பஜன்.
வழக்கம் போல யாரும் இதற்கு பதில் கூறப்போவதில்லை. எனினும், ஹர்பஜன் போன்ற ஒருவர் இந்திய அணி நிர்வாகத்தை கேள்வி கேட்பது நல்ல ஆரம்பமே..