லண்டன் : இந்திய அணியின் மோசமான டெஸ்ட் தோல்விக்கு பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பதில் சொல்லியே ஆக வேண்டும் என வெகுண்டு எழுந்துள்ளார் ஹர்பஜன். இந்திய அணி டெஸ்ட் தரவரிசையில் தற்போது முதல் இடத்தில் இருக்கிறது. விராட் கோஹ்லி தலைமையில் பெரிய வெற்றிகள் பெறும் என்ற பிம்பத்தோடு இங்கிலாந்து சென்ற அணி, தற்போது எந்த போராட்டமும் இன்றி இரண்டு இன்னிங்க்ஸ்களில், 237 ரன்கள் மட்டும் எடுத்து, மொத்தமாக 82 ஓவர்கள் வரை மட்டுமே சந்தித்து படு தோல்வி அடைந்துள்ளது. இதுவரை ரவி சாஸ்திரி மற்றும் விராட் கோஹ்லி கூட்டணி அதிக சக்தி கொண்டவர்களாக செயல்பட்டார்கள். அவர்கள் நினைக்கும் வீரர்கள், உதவி பயிற்சியாளர்கள் என அனைத்தும் அவர்கள் எண்ணப்படி நடந்தது. போட்டிக்கு முன் திட்டம் போடுவதிலும், யாரை அணியில் ஆட வைக்கலாம் என்பதிலும் இவர்கள் இருவரை மீறி எதுவும் நடக்காது என்ற அளவுக்கு இருந்தது இவர்களின் அதிகாரம். இத்தனை அதிகாரம் சரியல்ல என்றாலும், யார் இதை சொல்வது என்ற தயக்கத்தில் யாரும் இவர்களைப் பற்றி பேசவில்லை. ஆனால், தற்போது மோசமான தோல்வியை சந்தித்த நிலையில், கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி பல முன்னாள் வீரர்களும் இந்திய அணியை காய்ச்சி வருகிறார்கள். இப்போது கூட வெகுசிலர் தான் நேரடியாக ரவி சாஸ்திரி மீது குற்றச்சாட்டு வைக்கின்றனர். ஹர்பஜன் மிக வெளிப்படையாகவே, ரவி சாஸ்திரி வெளியே வந்து இன்றோ, நாளையோ, விளக்கமளிக்க வேண்டும். அவர் அனைவருக்கும் பதிலளிக்க வேண்டிய கடமை உள்ளது என தெரிவித்துள்ளார். ரவி சாஸ்திரி இந்த இங்கிலாந்து தொடர் தொடங்கும் முன்பு பேசிய போது, சூழ்நிலைகள் எங்களை எந்த விதத்திலும் பாதிக்காது. எல்லா இடமும் சொந்த இடம் தான். பிட்ச்சை தெரிந்து கொண்டு அதை வெல்வதுதான் எங்கள் பணி என கூறியிருந்தார். ஹர்பஜன் பேசும்போது, ரவி சாஸ்திரி தற்போது நேரில் வந்து, சூழ்நிலைகள் மிகப்பெரிய வித்தியாசங்களை ஏற்படுத்தும் என ஒப்புக்கொள்ள வேண்டும் என கூறினார். ரவி சாஸ்திரி இதுவரை தோல்விகள் குறித்து எதுவும் பேசவில்லை. இனியாவது பேசுவாரா என பார்ப்போம்.