வேற வேற ஆள்னா, வேற வேற ரூல்ஸா?... அணித் தேர்வில் நியாயம் கேட்கும் ஹர்பஜன்
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன், மாயன்க் அகர்வால் ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடிக்காதது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆசிய கோப்பைக்கான இந்திய அணி சில நாட்கள் முன்பு அறிவிக்கப்பட்டது. அதில், விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு ரோஹித் சர்மா கேப்டன் பொறுப்பு அளிக்கப்பட்டது.
பல வீரர்கள் புதிதாகவும், சில காலம் கழித்தும் அணியில் இடம் பிடித்துள்ளனர். கிட்டத்தட்ட உலகக் கோப்பை அணிக்கான வீரர்களை சோதிக்கும் முயற்சியாகவே இந்த தேர்வு பார்க்கப்படுகிறது.

ரொம்ப நாளா வெயிட்டிங்
இந்த நிலையில், நீண்ட காலமாகவே முதல் தர போட்டிகளில் சிறப்பாக ஆடி வரும் மாயன்க் அகர்வால் அணியில் இடம் பிடிக்கவில்லை. இங்கிலாந்து தொடரிலேயே அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது, ஆசிய கோப்பை போட்டியிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
நியாயம் கேட்கும் ஹர்பஜன்
இது பற்றி ஹர்பஜன் நியாயம் கேட்டுள்ளார். தன் ட்விட்டர் பக்கத்தில் ஆசிய கோப்பை இந்திய அணி பட்டியலை வெளியிட்டுள்ள ஹர்பஜன், "எங்கே மாயன்க் அகர்வால்? நிறைய ரன்கள் அடித்த பின்னும், அவரை அணியில் பார்க்க முடியவில்லை....வேறு வேறு ஆட்களுக்கு, வேறு வேறு விதிகள் என நினைக்கிறேன்" என காட்டமாக கூறியுள்ளார்.

இதோ சீக்கிரம் கிடைக்கும்
இது பற்றி இந்திய அணி தேர்வாளர் எம்.எஸ்.கே.பிரசாத்திடம் கேட்ட போது, "மாயன்க் அகர்வால் கடந்த 10-12 மாதமாக தொடர்ந்து சிறப்பாக ஆடி வருகிறார். அவர் இன்னும் ஒரு படி தான் பின்னே இருக்கிறார். சரியான நேரத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும். யாராவது மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கும் போது அவருக்கு வாய்ப்பு கிடைக்கும்" என சமாளித்தார்.

வாய்ப்பு கிடைத்த வீரர்கள்
ஆசிய கோப்பை அணியில் அம்பத்தி ராயுடு, கேதார் ஜாதவ், மனிஷ் பாண்டே ஆகியோர் சில கால இடைவெளிக்கு பின் மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளனர். விராட் கோலி இல்லாத நிலையில், ரோஹித் சர்மா கேப்டனாகவும், தோனி, பும்ரா, புவனேஸ்வர் குமார் தவான் உள்ளிட்டோர் திறமை மற்றும் அனுபவம் கொண்ட வீரர்களாக உள்ளனர். பந்துவீச்சில் இளம் வீரரான கலீல் அஹமத் புதிதாக இடம் பிடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications